கோவை:’மெட்ராஸ் ஐ’ பாதிப்பு வேகமாக பரவி வரும் நிலையில், விழிப்புடன் இருந்தால், பாதிப்பை தவிர்க்கலாம் என, டாக்டர்கள் தெரிவிக்கின்றனர்.
கடந்த மூன்று ஆண்டுகளாக கொரோனாவை தவிர வேறு, எந்த நோய் குறித்தும் யோசிப்பதற்கு நேரம் இல்லை. ஆனால், ‘நாங்கள் இன்னும் இருக்கோம்ல,’ என்பது போல், தற்போது ‘மெட்ராஸ் ஐ’ வேகமாக பரவி வருகிறது.
கோவையில் பாதிப்பு இன்னும் அதிகரிக்கவில்லை. கோவை அரசு மருத்துவமனையில் நேற்று முன்தின நிலவரப்படி, 17 பேர் இப்பாதிப்புக்காக சிகிச்சை பெற்றனர்.
ஏறக்குறைய, 20 சதவீதத்துக்கும் அதிகமானோர் ‘மெட்ராஸ் ஐ’ எனப்படும் ‘கான்ஜுன்க்டிவிடிஸ்’ நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், விழிப்புடன் இருந்தால், மெட்ராஸ் ஐ பாதிப்பை தவிர்க்கலாம் என, டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
கோவை அரசு மருத்துவமனை டீன் நிர்மலா கூறியதாவது:
ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு, பாதிப்பு வேகமாகப் பரவும். இது பாக்டீரியா அல்லது வைரஸ் தொற்று காரணமாக ஏற்படுகிறது. கண்களில் எரிச்சல், நீர் வடிதல், கண்கள் சிவத்தல், அழுக்குகள் வெளியேற்றம் மற்றும் அதிக உறுத்தல் ஆகியவை ஏற்படும்.
இது ஒரு சிறிய கண் தொற்று என்றாலும், சரியான முறையில் டாக்டரிடம் சிகிச்சை பெறவேண்டியது அவசியம். சுய மருத்துவத்தை தவிர்க்க வேண்டும். குறிப்பாக மஞ்சள், சொட்டு மருந்துகளை தவிர்க்க வேண்டும்.
கண் நிபுணரால் பரிந்துரைக்கப்பட்ட நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகள், கண் சொட்டு மருந்துகளை பயன்படுத்த வேண்டும். பாதிக்கப்பட்டவரின் துண்டு, தலையணை, கவர்கள் மற்றும் மேக்கப் பொருட்கள் உள்ளிட்ட தனிப்பட்ட உடைமைகளை பயன்படுத்துவதால், இந்நோய் மற்றொருவருக்கு எளிதில் பரவும்.
எனவே, நோயாளிகளை தனிமைப்படுத்துவது முக்கியம். நோயாளிகள் தங்கள் கண்களை அடிக்கடி கழுவினால் போதும். அடிக்கடி கைகளை கழுவ வேண்டும். நோய் பாதித்தவர்கள் சரியாகும் வரை, பொது இடங்களுக்கு செல்வதை தவிர்க்கலாம். இவ்வாறு, அவர் கூறினார்.
‘இல்லம் தேடி’ வராத மாணவர்கள் பட்டியல் தயாரிக்க உத்தரவு
மூன்று மாத குழந்தைக்கு இருதய அறுவை சிகிச்சை
Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMiNGh0dHBzOi8vd3d3LmRpbmFtYWxhci5jb20vbmV3c19kZXRhaWwuYXNwP2lkPTMxNzcyODnSAQA?oc=5