ஆளுநருக்கு எதிராக சென்னையில் சுவரொட்டிகள் – தினமணி

சென்னைச் செய்திகள்

ஆளுநருக்கு எதிராக சென்னையில் ஒட்டப்பட்டிருக்கும் சுவரொட்டிகள்

சென்னை: தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியை கண்டித்து, சென்னையில் முக்கியமான பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகளால் செவ்வாய்க்கிழமை பரபரப்பு ஏற்பட்டது.

தமிழ்நாடு சட்டப் பேரவைக் கூட்டம் திங்கள்கிழமை தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி உரையுடன் தொடங்கியது. அப்போது, தமிழ்நாடு அரசு தயாரித்துக் கொடுத்த உரையில் தமிழ்நாடு, திராவிட மாடல் என்ற வார்த்தைகள் அடங்கிய பல வரிகளை ஆளுநர் வாசிக்காமல் தவித்தார். 

மேலும், இதைக் கண்டித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், ஆளுநருக்கு எதிரான தீர்மானத்தை முன்மொழிந்த போது, ஆளுநர் ரவி அங்கிருந்து பாதியிலேயே வெளியேறி சென்றார். தேசிய கீதம் பாடப்படும் முன்பே ஆளுநர் ரவி, அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். இது  பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

ஆளுநரின் இந்தச் செயலுக்கு பல்வேறு கட்சித் தலைவர்களும் கண்டனம் தெரிவித்தனர். 

இந்நிலையில் ஆளுநரின் செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் ஆழ்வார்பேட்டை, கிண்டி, சைதாப்பேட்டை, செம்மொழி பூங்கா, அண்ணா அறிவாலயம் ஆகிய இடங்களில் #GetOutRavi என்று டிவிட்டரில் நேற்று டிரெண்டிங் செய்யப்பட்ட வார்த்தையைப் பதிவிட்டவர்களுக்கு நன்றி கூறும் வகையில் திமுக சார்பில் பிரம்மாண்ட  சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. 

இந்த சுவரொட்டிகள் அரசியல் கட்சிகளிடம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.
 

Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMifmh0dHBzOi8vd3d3LmRpbmFtYW5pLmNvbS9hbGwtZWRpdGlvbnMvZWRpdGlvbi1jaGVubmFpL2NoZW5uYWkvMjAyMy9qYW4vMTAvcG9zdGVycy1pbi1jaGVubmFpLWFnYWluc3QtdGhlLWdvdmVybm9yLTM5ODE3NDYuaHRtbNIBe2h0dHBzOi8vbS5kaW5hbWFuaS5jb20vYWxsLWVkaXRpb25zL2VkaXRpb24tY2hlbm5haS9jaGVubmFpLzIwMjMvamFuLzEwL3Bvc3RlcnMtaW4tY2hlbm5haS1hZ2FpbnN0LXRoZS1nb3Zlcm5vci0zOTgxNzQ2LmFtcA?oc=5