இதையடுத்து பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்பு பிரிவு துணை கமிஷனர் ஜெயலட்சுமி சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி கீழ்ப்பாக்கம் போலீஸாருக்கு உத்தரவிட்டார். அதன்பேரில் பாலியல் வன்கொடுமை வழக்கில் தலைமறைவாக இருந்த டிபி சத்திரத்தைச் சேர்ந்த ராஜ்குமார், ஆனந்த் ஆகியோரை கீழ்ப்பாக்கம் அனைத்து மகளிர் போலீஸார் கைது செய்தனர். இருவரிடமும் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தது தொடர்பாக போலீஸார் விசாரித்தனர். அதை வாக்குமூலமாக பதிவு செய்தனர். விசாரணைக்கு பிறகு அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள ரவுடி லிங்கத்தை போலீஸார் தேடிவருகின்றனர்.
இதுகுறித்து கீழ்ப்பாக்கம் அனைத்து மகளிர் போலீஸார் கூறுகையில், “சென்னையில் 22 வயதான மனநலம் குன்றிய பெண் தனது தாயுடன் வசித்து வருகிறார். அதிகாலையில் அந்தப்பெண், வீட்டில் அசந்து துாங்கிக் கொண்டிருந்துள்ளார். அப்போது வீட்டின் கதவை உடைத்து 3 மர்ம நபர்கள் உள்ளே நுழைந்துள்ளனர். அந்தப்பெண்ணையும், அவரது தாயையும் சரமாரியாக தாக்கினர். தாயின் கண் முன்னாலேயே கத்தி முனையில் மாற்றுத்திறனாளி பெண்ணை மூவரும் கூட்டாக சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். அப்போது பாதிக்கப்பட்ட பெண்கள் கூச்சலிடவே அங்கிருந்து தப்பியோடி விட்டனர். அவர்களில் இருவரை கைது செய்துள்ளோம்” என்றனர்.
Source: https://www.vikatan.com/news/crime/chennai-police-arrested-2-youth-charged-rape-case