சென்னை: சென்னையில் மேலும் ஒருவருக்கு கொரோனா வைரஸ் அறிகுறி ஏற்பட்டதை அடுத்து அவர் சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் தனி வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தமிழகத்தில் காஞ்சிபுரத்தை சேர்ந்த ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு அவர் ராஜீவ் காந்தி மருத்துவமனையில் தனிவார்டில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அவர் அண்மையில் ஓமன் நாட்டிலிருந்து வந்தார் என தெரியவந்தது. இதையடுத்து அவருக்கு மனைவிக்கும் கொரோனா அறிகுறிகள் இருந்ததை அடுத்து நடத்தப்பட்ட சோதனையில் அவருக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்பது உறுதியானது.
திணறும் உ.பி.. அச்சத்தில் பெங்களூர்.. இந்தியாவில் எந்தெந்த மாநிலங்களில் கொரோனா தாக்கியுள்ளது?
இந்த நிலையில் மலேசியா, தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளுக்கு சுற்றுலா சென்றுவிட்டு 10 நாட்களுக்கு முன்பு திருவாலங்காடு அருகே உள்ள மணவூர் கிராமத்திற்கு தினேஷ் என்ற இளைஞர் திரும்பினார்.
அவருக்கு நேற்று திடீரென உடல் சோர்வு ஏற்பட்டதை அடுத்து திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சிறப்பு வார்டில் ரத்தப் பரிசோதனை செய்யப்பட்டது. அவருடன் சிகிச்சைக்கு வந்த அவரது தந்தையின் ரத்த மாதிரிகளும் எடுத்து சோதனை செய்யப்பட்டது.
மேல் சிகிச்சைக்காக அவசர அவசரமாக கவச உடை அணிவிக்கப்பட்டு 108 ஆம்புலன்ஸ் வாகனத்தில் இருவரும் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு சிறப்பு வார்டில் இருவருக்கும் முழு உடல் பரிசோதனை மேற்கொள்ளபட்டுள்ளது. பரிசோதனைக்கு பின்னர்தான் அவர்களுக்கு கொரோனா பாதிப்பு இருக்கிறதா இல்லையா என்பது தெரியவரும் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.
Source: https://tamil.oneindia.com/news/chennai/one-more-patient-has-coronavirus-and-admitted-in-chennai-hosptial-379248.html