சென்னை: ஃபுல் லாக்… உள்ளே, வெளியே எதுவும் கிடையாது? – Samayam Tamil

சென்னைச் செய்திகள்

சென்னையில் கொரோனா எண்ணிக்கை நாளுக்கு நாள் புதிய உச்சத்தை எட்டி வருகிறது. சமீப நாட்களாகச் சென்னையில் தினமும் ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனா வைரஸ் காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ளது கண்டறியப்பட்டு வருகிறது.

இந்த சூழலில் சென்னையைத் தமிழ்நாட்டிலிருந்து தனிமைப் படுத்த திட்டமிட்டு, அது தொடர்பான ஆலோசனைகளை மாநகராட்சி அதிகாரிகள், ஐஏஎஸ் அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

மாநிலத்தில் கொரோனா தாக்கப்பட்டுள்ளவர்கள் எண்ணிக்கையில் அதிகம்பேர் சென்னைவாசிகள். இப்போதைய நேரத்தில் சென்னையிலிருந்து வேறு மாவட்டங்கள் செல்லும் பலருக்கு கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளது.

இதன் காரணமாகச் சென்னை, சென்னையைச் சுற்றியுள்ள மாவட்டங்களை முழுவதும் தனிமைப்படுத்தி மக்கள் உள்ளே வருவதையும்,வேறு மாவட்டங்களுக்குச் செல்வதையும் தடுத்து நிறுத்த பணிகளைத் தீவிரப்படுத்த அதிகாரிகள் முன் வந்துள்ளனர்.

இது தொடர்பான ஆலோசனைகள் ஒருபுறம் நடந்து வரும் சூழலில் இப்போதைய நேரத்தில் அதிகளவில் போலீஸ், சுகாதாரத் துறை அதிகாரிகள், ஐஏஎஸ் அதிகாரிகள் வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுவதால், மக்களைக் கட்டுப்படுத்துவதில் சில சிரமங்கள் உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

மாணவர்களின் உயிரோடு விளையாடும் அரசு: ஸ்டாலின் குற்றச்சாட்டு!

எனினும் சென்னையில் அதிகரித்து வரும் கொரோனாவை கட்டுப்படுத்த உள்ள வழிகள் தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் தீவிரமாகத் திட்டம் தீட்டி வருகின்றனர்.

இதன் காரணமாகச் சரியான காரணம் எதுவுமின்றி யாருக்கும் இ-பாஸ் வழங்க வேண்டாம் எனச் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் அரசு அறிவுறுத்தியுள்ளது.

அவசர காரியங்களைத் தவிர்த்து எதற்காகவும் சென்னைக்குள் வர யாரையும் அனுமதிக்க வேண்டாம் என பாஸ் வழங்கும் அதிகாரிகளுக்கும், மாவட்ட எல்லையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருக்கும் போலீசுக்கும் உத்தரவு சென்றுள்ளது.

Source: https://tamil.samayam.com/latest-news/state-news/chennai-strict-rules-restriction-in-giving-e-pass-govt-officers-discussion/articleshow/76254993.cms