பரிசோதனை எடுத்து எட்டு நாள் கழித்து பாசிடிவ் என அழைத்த மாநகராட்சி – News18 தமிழ்

சென்னைச் செய்திகள்
கோப்புப் படம்

  • Share this:
திருவொற்றியூரை சேர்ந்த தந்தை, மகன் இருவரும் கடந்த வாரம் அருகில் இருந்த மாநகராட்சி மையத்தில் கொரோனாவுக்கான பரிசோதனை எடுத்துள்ளனர். தாங்கள் வசிக்கும் இடத்தில் சிலருக்கு தொற்று உறுதியானதால் இவர்களும் பரிசோதனை செய்துள்ளனர்.

சென்னை மாநகராட்சியில் பரிசோதனை செய்யும் நபருக்கு தொற்று இருந்தால் இரண்டு நாட்களில் அழைப்பு வரும். தொற்று இல்லையென்றால் அழைப்பு வராது.

மகனுக்கு தொற்று உறுதியாகியுள்ளதாக இரண்டு நாட்களில் மாநகராட்சியிலிருந்து அழைப்பு வந்ததை அடுத்து அவருக்கு அடுத்தடுத்து பரிசோதனைகள் செய்து அரசு தனிமைப்படுத்தும் மையத்தில் தங்க வைக்கப்பட்டிருந்தார்.

தீவிர அறிகுறிகள் ஏதும் இல்லாததால் ஐந்து நாட்களில் அவர் வீட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளார். அவர் வீட்டுக்கு வந்த பிறகு சென்னை மாநகராட்சியிலிருந்து அவரது தந்தைக்கு தொற்று இருப்பதாக கூறி அழைப்பு வந்துள்ளது.

இதை நம்புவதா வேண்டாமா என்ற குழப்பத்தில் தந்தையும் மகனும் உள்ளனர். ஏன் எட்டு நாட்கள் கழித்து அழைப்பு வந்தது என கேட்டதற்கு உரிய விளக்கம் ஏதும் கிடைக்கவில்லை.

Also read… தாய்- தந்தை கொரோனாவால் உயிரிழப்பு… தவிக்கும் மூளை வளர்ச்சி குன்றிய மகன்சென்னையில் உள்ள கொரோனாவுக்கான அரசு மருத்துவமனைகளில் பரிசோதனை செய்து கொண்டால் , முடிவுகளை தெரிந்து கொள்ள சம்பந்தப்பட்ட கட்டுப்பாட்டு அறைக்கு அழைக்கலாம்.

ஆனால் மாநகராட்சியின் மையங்களில் பரிசோதனை செய்தால் தொற்று உறுதியானால் மட்டுமே சம்பந்தப்பட்டவருக்கு அழைப்பு வரும்.

பொதுவாக 48 மணி நேரத்தில் அழைப்பு வரும் என்றாலும் இதற்கு எந்த கால நிர்ணயமும் கிடையாது. இந்த நடைமுறை மிகுந்த மன உளைச்சலை தருவதாகவும் இதனால் நோயை பரப்பக் கூடிய அபாயமும் இருப்பதாகவும் மக்கள் கவலைக் கொள்கின்றனர்.


First published: June 30, 2020

Source: https://tamil.news18.com/news/tamil-nadu/chennai-the-corona-test-positive-results-came-from-the-chennai-corporation-after-eight-days-vin-sar-311599.html