பக்ரீத் பண்டிகை.. பொது இடங்களில் விலங்குகளை பலியிட அனுமதிக்க கூடாது.. சென்னை ஹைகோர்ட் – Oneindia Tamil

சென்னைச் செய்திகள்

சென்னை: கொரோனா தொற்று பரவி வருவதால், பக்ரீத் பண்டிகையை ஒட்டி பொது இடங்களில் விலங்குகளை பலியிட அனுமதிக்கக் கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொரோனா தொற்று பரவி வரும் நிலையில், பக்ரித் பண்டிகையை ஒட்டி பொதுவெளியில் மாடு, ஒட்டகம் போன்ற விலங்குகளை பலியிடுவதற்கும், இறைச்சி விற்பனைக்கும் தடை விதிக்க கோரி மதுரை வடஇந்தியர் சங்கத்தின் சார்பில் அதன் தலைவர் ஹூக்கம் சிங் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

அந்த மனுவில், ஒரே நேரத்தில் பல இடங்களில் இருந்து ஆயிரக்கணக்கான விலங்குகள் கொண்டு வரப்படுவதாகவும், அப்போது உரிய விதிகள் பின்பற்றப்படாமல் விலங்குகள் வதை செய்யப்படுவதாகவும் மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்த வழக்கு நீதிபதிகள் வினீத் கோத்தாரி மற்றும் கிருஷ்ணன் ராமசாமி அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, பொது இடங்களில் விலங்குகள் கொல்வதற்கு தடை விதித்து கடந்த ஜூன் 20ம் தேதி மத்திய அரசு அறிவிப்பாணை வெளியிட்டுள்ளதாகவும், மஹாராஷ்டிரா மாநில அரசு பக்ரீத் பண்டிகையை வீட்டில் வைத்து எளிய முறையில் கொண்டாடும்படியும், பொது இடங்களில் மத விழாக்களாக நடத்த வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளதாகவும் மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

imageநீர்நிலை ஆக்கிரமிப்புகளை கண்டுகொள்ளாத அதிகாரிகள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கலை? – ஹைகோர்ட் கண்டனம்

இந்த மனு குறித்து அரசின் கருத்தை அறிந்து தெரிவிக்க அவகாசம் வழங்க வேண்டும் என, தமிழக அரசுத்தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கோரிக்கை விடுத்தார்.

பக்ரீத் பண்டிகை நெருங்கி விட்டதையும், தமிழகத்தில் ஆகஸ்ட் 31 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதையும் சுட்டிக்காட்டிய நீதிபதிகள், பொது இடங்களில் விலங்குகள் பலியிட தடை விதித்து மத்திய அரசு பிறப்பித்த அறிவிப்பாணையை கண்டிப்புடன் அமல்படுத்த வேண்டும் என தமிழக அரசுக்கும், காவல் துறைக்கும் உத்தரவிட்டனர்.

மேலும், மகாராஷ்டிரா மாநில அரசு பிறப்பித்துள்ள விதிகளைப் போல தமிழக அரசும் விதிகளை வெளியிட வேண்டும் எனவும், விலங்குகள் பலியிடுவது தொடர்பாக மத்திய அரசின் உத்தரவுகளையும், உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்ற உத்தரவுகளையும் மாநில அரசு அமல்படுத்தும் என எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தனர்.

மறைந்த முன்னாள் பிரதமர் நேருவின் கருத்தான, விலங்குகளிடம் அன்பு செலுத்த வேண்டும் என்ற கருத்தை அரசியல் தலைவர்களும், மதத் தலைவர்களும் சமூக செயற்பாட்டாளர்களும் பிரச்சாரம் செய்ய வேண்டும் என அறிவுறுத்திய நீதிபதிகள், இந்த மனுவுக்கு மூன்று வாரங்களில் பதிலளிக்கும்படியும், நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தியது குறித்து அறிக்கை அளிக்கவும் தமிழக அரசுத்தரப்புக்கு உத்தரவிட்டு விசாரணையை ஆகஸ்ட் 20ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

, பதிவு இலவசம்!

Source: https://tamil.oneindia.com/news/chennai/chennai-high-court-orders-not-to-kills-animals-on-the-public-place-during-eid-392924.html