சென்னை: சென்னை மாநகராட்சி முன்னாள் ஆணையர் பிரகாஷ் திறன் மேம்பாட்டுக் கழக இயக்குநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தமிழக முதல்வராக திமுக தலைவர் ஸ்டாலின் பொறுப்பேற்றதில் இருந்து பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அதன் ஒரு கட்டமாக இன்று ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் வரிசையாக டிரான்ஸ்பர் செய்யப்பட்டனர்.
ஒரே நாளில் மொத்தம் 14 ஐஏஎஸ் அதிகாரிகள், 20 ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டனர். முன்னாள் ஆட்சியில் முக்கிய பொறுப்புகளை வகித்த பலருக்கு சின்ன சின்ன பொறுப்புகள் கொடுத்து இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை
அதன்படி சென்னை மாநகராட்சி முன்னாள் ஆணையர் பிரகாஷ் திறன் மேம்பாட்டுக் கழக இயக்குநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் அதிமுக ஆட்சியில் அமைச்சர்களுக்கு நெருக்கமாக இருந்தார். முக்கியமாக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் குட் புக்கில் இருந்தார்.
ஸ்டாலின்
இந்த நிலையில் ஸ்டாலின் முதல்வராக வந்ததும் இவருக்கு பதிலாக நேர்மையான, கண்டிப்பான சுகன்தீப் சிங் பேடி அந்த பொறுப்பிற்கு வந்தார். ஸ்டாலின் எடுத்த முதல் சில நடவடிக்கைகளில் இதுவும் முக்கியமானதாக பார்க்கப்பட்டது. ஜி பிரகாஸுக்கு எந்த விதமான பொறுப்பும் அப்போது அறிவிக்கப்படவில்லை.
மாற்றம்
இந்த நிலையில் ஐஏஎஸ் அதிகாரி பிரகாஷ் தற்போது திறன் மேம்பாட்டுக் கழக இயக்குநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். பெரிய அதிகாரம் இல்லாத துறைக்கு இவர் மாற்றப்பட்டுள்ளார். இதேபோல் முந்தைய அதிமுக ஆட்சியில் முக்கிய பதவிகளை வகித்த பலர் சிறிய பொறுப்புகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
செயலாளர்கள்
முன்னாள் முதல்வரின் செயலாளர்கள் விஜயகுமார், சாய்குமார், ஜெயஸ்ரீமுரளிதரன் ஆகியோரும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதோடு சென்னையின் முன்னாள் மாநகரக காவல் ஆணையராக இருந்த மகேஷ் குமார் அகர்வால், தற்போது, சென்னை குற்றப்பிரிவு ஏ.டிஜிபி.யாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். பொருளாதார குற்றப்பிரிவு ஐ.ஜியாக ஆர். தினகரன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
Source: https://tamil.oneindia.com/news/chennai/greater-chennai-former-commissioner-prakash-transferred-to-a-small-post-by-tn-govt-420923.html