சென்னை: சிங்கார சென்னை 2.o திட்டத்தின் கீழ் தலைநகர் சென்னையில் புதிதாக மூன்று பாலங்களைக் கட்ட திட்டமிட்டுள்ளதாகச் சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
தலைநகர் சென்னையில் போக்குவரத்து நெரிசல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. நகர் பேருந்துகள், மெட்ரோ ரயில்கள், மின்சார ரயில்கள் எனப் பல பொது போக்குவரத்து இருந்தாலும் கூட, சொந்த வாகனத்தில் பயணிக்கவே பெரும்பாலான மக்கள் விரும்புகின்றன.
இதனால் சென்னையையும் போக்குவரத்து நெரிசலையும் பிரிக்க முடியாததாகி விட்டது. தலைநகர் சென்னையில் தினசரி 10 லட்சம் கார்கள், 40 லட்சம் இரு சக்கர வாகனங்கள் இயக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.
3 பெரிய தலைகள் ஆஜராகியும்.. கிரீன் சிக்னல் தந்த உச்சநீதிமன்றம்.. கோடநாடு கேஸில் இபிஎஸ்சுக்கு செக்கா?
3 புதிய மேம்பாலங்கள்
சென்னை அதிகரித்து வரும் கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்தும் வகையில் நகர் முழுவதும் 3 மேம்பாலங்களைக் கட்ட சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளதது. சிங்கார சென்னை 2.o திட்டத்தின் கீழ் இந்த மேம்பாலங்கள் கட்டப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வியாசர்பாடி ஜீவா ரயில் நிறுத்தம் அருகே கணேசபுரத்தில் 175 கோடி ரூபாயில் மதிப்பில் நான்கு வழி மேம்பாலம் கட்டப்படவுள்ளது. அதேபோல தியாகராயர் நகர் உஸ்மான் சாலையிலிருந்து அண்ணா சாலை வரை இரண்டு வழி மேம்பாலம் 90 கோடி ரூபாயில் கட்ட சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.
4 வாரங்களில் பணிகள் தொடங்கும்
மூன்றாவதாக 75 கோடி ரூபாயில் மதிப்பில் ஓட்டேரி நல்லா அருகே இரண்டு வழி மேம்பாலத்தைக் கட்டவும் சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. இந்த மேம்பாலப் பணிகளுக்குத் திட்ட அறிக்கை தயார் செய்யும் பணிகள் தற்போது நடைபெற்று வருவதாகவும் நான்கு வாரங்களுக்குள் திட்ட அறிக்கை இறுதி செய்யப்படும் என்றும் மாநகராட்சி அறிவித்துள்ளது. திட்ட அறிக்கை தாக்கல் செய்யப்பட்டவுடன் உடனடியாக முதற்கட்ட மேம்பாலப் பணிகள் தொடங்கப்படும் என்றும் சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
பழைய பாலங்கள்
ஒரு புறம் புதிய பாலங்களைக் கட்டும் பணிகள் என்றால், மறுபுறம் ஏற்கனவே இருக்கும் பாலங்களை மேம்படுத்தவும், அழகுபடுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக எழும்பூர் பந்தியன் சாலை மேம்பாலம், கிண்டி ஐஐடி மேம்பாலம், கோட்டூர்புரம் மேம்பாலம் ஆகியவை முதற்கட்டமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. சுமார் எட்டு கோடி ரூபாய் மதிப்பீட்டில் இந்த 3 மேம்பாலங்களும் அழகுப்படுத்தப்படுடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சிங்கார சென்னை 2.o
முன்னதாக, கடந்த 2006 – 2011 வரையிலான திமுக ஆட்சியில் சிங்கார சென்னை திட்டம் செயல்படுத்தப்பட்டது. அதன்படி தலைநகரை அழகுபடுத்தும் பணிகளையும் சென்னையின் உள்கட்டமைப்பை மேம்படுத்தும் பணிகளும் நடந்தது. இருப்பினும், அதிமுக ஆட்சியில் சிங்கார சென்னை திட்டம் அப்படியே கிடப்பில் போடப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் எந்தவொரு அறிவிப்பும் வெளியாகாமல் இருந்தது. இந்தச் சூழலில் தான் கடந்த ஆகஸ்ட் 13ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் சிங்கார சென்னை 2.o திட்டம் செயல்படுத்தப்படும் என நிதியமைச்சர் பிடிஆர் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Source: https://tamil.oneindia.com/news/chennai/under-singara-chennai-three-new-bridges-will-be-constructed-in-chennai-432253.html