சென்னை ஷாக்! 5 வயது சிறுவனுக்கு சூடு வைத்து, தலையை சுவற்றில் அடித்துக் கொலை செய்த அக்கா – Oneindia Tamil

சென்னைச் செய்திகள்

சென்னை: சென்னையை அடுத்த காட்டாங்கொளத்தூரில் 5 வயது சிறுவனுக்கு சூடு வைத்து, அடித்து கொடுமைப்படுத்தி, தலையை சுவற்றில் அடித்துக் கொலை செய்த அக்காவை போலீசார் கைது செய்தனர்.

5வயது சிறுவனின் குறும்புத்தமான செயல்களை ரசிக்க மனமில்லாத கொடூர மனம் படைத்த 20 வயது அக்கா செய்த செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

திடீரென கொடைக்கானல் வந்த துர்கா ஸ்டாலின்.. ரகசியமாக வைக்கப்பட்டிருந்த வருகை!திடீரென கொடைக்கானல் வந்த துர்கா ஸ்டாலின்.. ரகசியமாக வைக்கப்பட்டிருந்த வருகை!

சிறுவன சித்ரவதை செய்து அடித்து கொலை செய்துவிட்டு, விளையாடியபோது மயங்கி விழுந்ததாக நாடகமாடிய அந்த கொடூர அக்கா, மருத்துவர்களுக்கு எழுந்த சந்தேகத்தாலும், போலீசாரின் விசாரணையில் சிக்கிக்கொண்டு சிறையில் கம்பி எண்ணுகிறார்,

எந்த ஊர்

செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி அடுத்த காட்டாங்கொளத்தூர், ரயில்வே ஸ்டேஷன் 2வது தெருவில் வாழ்பவர் தியாகராஜன், இவருக்கு 35 வயதாகிறது. இவரது மனைவி சூசை மேரி (30). இந்த தம்பதிக்கு 4 குழந்தைகள் உள்ளனர். கணவன், மனைவி இருவரும் வேலைக்கு செல்வதால், குழந்தைகளை கவனித்துக்கொள்ள முடியாத நிலை இருந்தது,

வளர்க்க முடியவில்லை

இதனால், சூசை மேரி தனது 2வது குழந்தை கீர்த்தி (8) மற்றும் 3வது குழந்தை ஆபேல் (5) ஆகியோரை பீர்க்கன்காரணை, காமராஜர் நகர், எம்ஜிஆர் தெருவில் உள்ள தனது அக்கா டார்த்தி வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளார். அங்கு டார்த்தி அவர்களை கவனித்து வந்தார். இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு டார்த்தி உடல்நலக்குறைவால் இறந்துவிட்டார்.

மயங்கி விழுந்த குழந்தை

இதையடுத்து, டார்த்தியின் மகள் மேரி (20), தம்பி தங்கைகளை, கவனித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு சிறுவன் ஆபேல் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தபோது திடீரென மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அக்காள் மேரி, குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்துள்ளார்,

மருத்துவர்கள் சந்தேகம்

அங்கு சிறுவன் ஆபேலை பரிசோதித்த மருத்துவர்கள் அவன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். மேலும், சிறுவனின் உடலில் தீக்காயங்கள், நகக்கீறல்கள் இருந்ததால் சந்தேகப்பட்டு பீர்க்கன்காரணை போலீசாருக்கு மருத்துவர்கள் தகவல் தெரிவித்தனர்.

உண்மையை சொன்ன அக்கா

அதன்பேரில் பீர்க்கன்காரணை போலீசார் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து சிறுவனின் அக்கா கீர்த்தியிடம் (8வயது) விசாரித்தபோது, பெரியம்மா மகளான மேரி அடிக்கடி தனது தம்பியை அடிப்பதுடன், சூடு வைப்பார் என கூறியிருக்கிறார்.

ரசிக்க மனம் இல்லை

அதனை தொடர்ந்து மேரியிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது மேரி கூறும் போது, சிறுவன் ஆபேல் அதிகமாக குறும்புத்தனம் செய்து வந்தால் அவனை அடிக்கடி தாக்கியும், சூடு வைத்து கொடுமைப்படுத்தினேன். சம்பவத்தன்று சிறுவனின் செயலால் கொதித்து போய் சரமாரியாக தாக்கி, தலையை பிடித்து சுவரில் மோதினேன். இதில் அவன் மயங்கி கீழே விழுந்துள்ளான். சிறிது நேரத்தில் மயக்கம் தெளிந்து எழுந்து விடுவான் என நினைத்து அப்படியே விட்டுவிட்டேன்.

சிறுவன் கொலை

ஆனால், நீண்ட நேரமாகியும் சிறுவன் அசைவின்றி கிடந்ததால், அவனை பரிசோதித்த போது இறந்தது தெரிந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த நான், சிறுவன் விளையாடும் போது தவறி விழுந்து மயங்கியதாக கூறி நாடகமாடினேன். கண்டுபிடித்துவிட்டார்கள்” இவ்வாறு மேரி போலீசாரிடம் கூறினார்.இதையடுத்து, மேரி மீது கொலை வழக்கு பதிந்து போலீசார் கைது செய்தனர். அக்காவே தம்பியை அடித்துக் கொலை செய்த சம்பவம் கூடுவாஞ்சேரி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

English summary
Police have arrested a sister who allegedly killed his 5 year old brother by beat head against a wall in Kattankulathur, next to Chennai.

Source: https://tamil.oneindia.com/news/chennai/chennai-a-sister-who-beat-a-5-year-old-boy-to-death-433266.html