சென்னை: சென்னையில் இன்று மதியம் முதல் நாளை மதியம் வரை தொடர்ந்து கனமழை பெய்யும் என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் கணித்துள்ள நிலையில் சென்னையை நோக்கி கருமேகங்கள் சூழ்ந்து வரக்கூடிய செயற்கைக்கோள் காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளன.
சென்னையில் கடந்த 4 நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்துள்ளது .
முதல்வர் ஸ்டாலின் தொடர்ந்து நான்காவது நாட்களாக சென்னை முழுக்க சுற்றுப்பயணம் செய்து நிவாரண பணிகளை மேற்பார்வையிட்டு வருகிறார்.
புது தலைவலி.. பாகிஸ்தானுக்கு பிரமாண்ட அதிநவீன போர்க்கப்பல் வழங்கிய சீனா.. இந்திய பெருங்கடலுக்கு குறி
பிரதீப் ஜான்
இந்த நிலையில்தான் நவம்பர் 10ஆம் தேதி இன்று மதியம் ஆரம்பித்து நவம்பர் 11ஆம் தேதி நாளை மதியம் வரை தொடர்ந்து இடைவிடாமல் கடலூர் முதல் சென்னை வரை மழை பெய்யக்கூடும் என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் நேற்று ட்வீட் வெளியிட்டு இருந்தார். தமிழ்நாடு வானிலை ஆய்வு மையமும் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதை உறுதி செய்தது.
கண்காணிப்பு தீவிரம்
மக்கள் பாதுகாப்பான இடங்களில் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர். குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை எந்த பகுதியில் சென்று கொண்டு இருக்கிறது என்பதை செயற்கைக்கோள் உதவியோடு தொடர்ந்து கண்காணிக்கும் பணி நடைபெற்று வருகிறது.
கருமேகங்கள்
இந்த நிலையில்தான் சென்னை பகுதியை நோக்கி கருமேகங்கள் சூழ்ந்து கொண்டு நகர்ந்து வந்து கொண்டிருக்கும் காட்சி இன்று பிற்பகலில் வெளியாகியிருக்கிறது. செயற்கைகோளில் எடுக்கப்பட்ட இந்த புகைப்படத்தை பார்க்கும் போது மழை எந்த அளவுக்கு வீரியமாக பெய்யும் வாய்ப்பு இருக்கிறது என்பது தெரிகிறது.
வீடுகளுக்கு போங்க
இதனிடையே இன்று ட்விட்டரில் ஒரு பதிவு வெளியிட்டுள்ள பிரதீப் ஜான், மிக விரைவில் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கன மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது என்பது செயற்கைக்கோள் புகைப்படங்கள் மூலமாக உறுதியாக தெரிகிறது. எனவே மாலை நேரத்தில் அலுவலகம் முடிந்து மக்கள் வீடுகளுக்கு திரும்பும்போது கனமழை பெய்யும் வாய்ப்பு இருப்பதால் முடிந்த அளவுக்கு வேகமாக வீடுகளுக்குத் திரும்பி விடுங்கள். இது விழிப்புணர்வு தகவல் மட்டும்தான். வானிலை இலாகாவின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை பின்தொடர்ந்து கொள்ளுங்கள் என்று அவர் தெரிவித்திருக்கிறார்.
பள்ளிகளுக்கு விடுமுறை
கனமழை காரணமாக விருதுநகர் முதல் சென்னை வரை மொத்தம் 17 மாவட்டங்களில் இன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது . நாளையும் பல்வேறு மாவட்டங்களில் குறிப்பாக டெல்டா மாவட்டங்களிலும் சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களிலும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே, மோசமான வானிலையால் சென்னையில் இருந்து புறப்படும் 4 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. சென்னை விமான நிலையத்திற்கு வரும் 4 விமானங்களும் ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: https://tamil.oneindia.com/news/chennai/chennai-rain-the-black-colour-clouds-are-coming-towards-the-chennai-see-the-image-438540.html