சென்னை: இரு சக்கர வாகனத்தில் பின்னால் அமருகிறவரும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்கிற நடைமுறை சென்னையில் இன்று முதல் அமலுக்கு வந்தது.
சென்னையில் சாலை விபத்துகளில் ஏற்படும் மரணங்கள் தொடர்பாக மாநகர போக்குவரத்து போலீசார் ஆய்வு நடத்தினர். இந்த ஆய்வுகளில் ஹெல்மெட் அணியாத பலரும் மரணிப்பது தெரியவந்தது. கடந்த ஜனவரி 1-ந் தேதி முதல் 15-ந் தேதி வரை சென்னையில் ஹெல்மெட் அணியாமல் சென்றதால் 98 பேர் சாலை விபத்தில் உயிரிழந்துள்ளனர்.
அத்துடன் ஹெல்மெட் அணியாமல் இரு சக்கர வாகனம் ஓட்டிச்சென்ற 714 பேரும், பின்னால் அமர்ந்து சென்ற 127 பேரும் காயம் அடைந்து இருக்கின்றனர் என்கின்றனர் போலீசார்.
இதனையடுத்தே இரு சக்கர வாகனத்தின் பின்னால் அமருகிறவருக்கும் ஹெல்மெட் கட்டாயம் என்பது நடைமுறைப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இது இன்று காலை முதல் சென்னை மாநகரில் அமலுக்கு வந்துள்ளது.
மேலும் சென்னை நகரில் ஹெல்மெட் அணியாதவர்களை பிடிக்க சிறப்பு தணிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சென்னையில் உள்ள 312 போக்குவரத்து சந்திப்புகளிலும் இது தொடர்பாக அதிரடிசோதனை நடத்தப்பட்டு வருகிறது. ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தில் செல்வோருக்கு அந்த இடத்திலேயே அபராதங்களும் விதிக்கப்படுகின்றன.
அலர்ட்! நாளை முதல் பைக்கில் பின்னால் இருப்பவர்களுக்கும் ஹெல்மெட் கட்டாயம்.. சென்னை போலீஸ் உத்தரவு
Source: https://tamil.oneindia.com/news/chennai/chennai-police-take-action-agaist-not-wearing-helmets-for-pillion-riders-459351.html