சென்னை: தலைநகர் சென்னை மற்றும் சுற்றியுள்ள மாவட்டங்களில் நல்ல மழை பெய்து வரும் நிலையில், சென்னையின் நீர் ஆதாரமாக உள்ள அனைத்து ஏரிகளும் வேகமாக நிரம்பி வருகின்றன.
கடந்த சில ஆண்டுகளைப் போல இல்லாமல் இந்த ஆண்டு மழைக்காலம் தொடங்கியது முதலே பரவலாகக் கனமழை பெய்து வருகிறது. இதனால் மாநிலத்தில் உள்ள முக்கிய ஏரி மற்றும் குளங்கள் நிரம்பி வருகிறது.
குறிப்பாகச் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட வடமாவட்டங்களில் இந்த ஆண்டு நல்ல மழை பெய்து வருகிறது.
5 ஸ்டார் விடுதிகளில் இருந்துவிட்டு..காற்று மாசுக்கு விவசாயிகளை குறை சொல்கிறீர்கள்.. நீதிபதிகள் சாடல்
ரெட் அலர்ட்
கடந்த நவ. 7ஆம் தேதி அதிகாலையில் குறுகிய நேரத்தில் கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் நகரின் பல்வேறு பகுதிகளிலும் வெள்ள நீர் தேங்கியது. அந்த கனமழையில் இருந்து மீண்டு சென்னை மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்பவே சில நாட்கள் ஆனது. இந்தச் சூழலில் வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாகச் சென்னை உள்பட 8 மாவட்டங்களில் இன்று மிகக் கனமழை பெய்யும் என்றும் இதனால் சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு நாளை ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Chembarambakkam Lake level % trend from 1 Nov till today. Currently reduced to 80% from 82% 2 days back. pic.twitter.com/JNoSz2TUkI
— Vijayanand – Covid Data Analyst (@vijay27anand) November 17, 2021
சென்னை ஏரிகள்
இப்படித் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் தலைநகர் சென்னையின் நீர் ஆதாரமாக உள்ள பல முக்கிய ஏரிகள் நிரம்பி வருகின்றன. நகரில் உள்ள ஏரிகள் அனைத்தும் 85% நிரம்பியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக நகரின் நீர் ஆதாரமாக விளங்கும் செம்பரம்பாக்கம் ஏரி 82%, புழல் ஏரி 87%, பூண்டி ஏரி 87%, சோழவரம் ஏரி 74% நிரம்பியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது
பூண்டி & செம்பரம்பாக்கம்
அதில் குறிப்பாகப் பூண்டி ஏரியின் கொள்ளளவு கடந்த நவ. 1ஆம் தேதி முதல் 80% மேல் இருக்கிறது. நவ. 11ஆம் தேதி மட்டும் ஏரியின் கொள்ளளவு 76%க்கு சென்றது அதன் பிறகு 80% மேலே இருந்து வருகிறது. கடந்த ஒரு வாரத்தில் அதிகபட்சமாக நவ. 15ஆம் தேதி ஏரியின் கொள்ளளவு 88% வரை சென்றது. அதேபோல செம்பரம்பாக்கம் ஏரியைப் பொறுத்தவரைக் கடந்த ஒரு வாரமாகவே ஏரியின் கொள்ளளவு 80% மேல் தான் இருந்து வருகிறது. அதிகபட்சமாக நேற்று ஏரி 82% நிரம்பிய நிலையில், இன்று அது 80%ஆகக் குறைந்துள்ளது.
அத்தியாவசியப் பொருட்கள்
மேலும், சென்னை மக்கள் 2 நாட்களுக்குத் தேவையான குடிநீர், பால், உணவுப் பொருட்களைத் தயாராக வைத்துக் கொள்ளச் சென்னை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது. மேலும், மழை தொடர்பான புகார் மற்றும் உதவிகளுக்கு 1913 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது அனைத்து வகையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைச் செய்ய அதிகாரிகள் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்றும் சென்னை மாநகாட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
புகார் எண்கள்
மழைப்பொழிவு உள்ள நேரங்களில் பொதுமக்கள் நீர்நிலைகள், நீர்வழிக் கால்வாய்கள் மற்றும் மழைநீர் தேங்கும் தாழ்வான இடங்களின் அருகில் செல்பி புகைப்படம் எடுக்கக் கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மழை தொடர்பான புகார்கள் மற்றும் பொதுமக்களுக்கு நிவாரண உதவிகளுக்குப் பெருநகர சென்னை மாநகராட்சியின் 1913 என்கின்ற உதவி எண்ணிலும், 9445477205, 9445025819, 9445025820 மற்றும் 9445025821 என்ற வாட்ஸ் ஆப் எண்களிலும் தொடர்பு கொள்ளலாம்” என்று அதில் கூறப்பட்டுள்ளது.
Source: https://tamil.oneindia.com/news/chennai/with-good-rain-all-the-lakes-around-chennai-is-now-rapidly-filling-up-439384.html