சென்னை: திமுக வட்டச் செயலாளரை வெட்டிப் படுகொலை செய்த மர்ம கும்பல் – தீவிர விசாரணையில் போலீஸ்! – Vikatan

சென்னைச் செய்திகள்

சென்னை மடிப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் செல்வம். இவர் அந்தப் பகுதியின் தி.மு.க வட்டச் செயலாளராக பதவி வகித்துவந்தார். செல்வம் மாநகராட்சி தேர்தலில்,188-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட தி.மு.க சார்பில் மனு அளித்திருக்கிறார். இந்த நிலையில், செல்வம் நேற்றிரவு கட்சி நிர்வாகிகளுடன் தேர்தல் ஆலோசனை நடத்திவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்திருக்கிறார். அப்போது, சுமார் இரவு ஒன்பது மணியளவில் சக்கர இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம கும்பல் செல்வத்தை சரமாரியாக வெட்டத் தொடங்கியது. அதில் நிலைகுலைந்த செல்வம் ரத்த வெள்ளத்தில் சரிந்து மயங்கினார்.

திமுக வட்டச் செயலாளர் செல்வம்

அதையடுத்து, அந்த கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றது. ரத்த வெள்ளத்தில் கிடந்த செல்வதை அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், செல்வதை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக தகவல் அளிக்கப்பட்டதை அடுத்து மருத்துவமனைக்கு விரைந்த மடிப்பாக்கம் போலீஸார், செல்வத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதைத் தொடர்ந்து, வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தேர்தல் நேரத்தில் தி.மு.க நிர்வாகி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Source: https://www.vikatan.com/news/crime/madipakkam-dmk-cadre-murdered-police-investigation-goes-on