தமிழக கிராமப்புற மாணவர்களுக்கு தனி டெக்னாலஜி சென்டர்; அசத்தும் ஐஐடி மெட்ராஸ்..! – Tamil Samayam

சென்னைச் செய்திகள்

IIT மெட்ராஸ் இன்னோவேட்டிங் டெக்னாலஜி பவுண்டேஷன் மற்றும் ஆஷா ஃபார் எஜுகேஷன் (Asha For Education) ஆகியவை இணைந்து, தமிழ்நாட்டில் உள்ள தொலைதூர மற்றும் கிராமப்புற அரசுப் பள்ளி மாணவர்களுக்கு கணினி அறிவியல் கல்வி குறித்த அறிவை வளர்க்கும் நோக்கத்துடன் கிராமப்புற தொழில்நுட்ப மையங்களைத் தொடங்கியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் கனகம்மா சத்திரம் மற்றும் சீத்தஞ்சேரி ஆகிய கிராமங்களில் இன்று இரண்டு மையங்கள் திறக்கப்பட்டுள்ளன.

“இந்த மையங்கள் தமிழ்நாட்டின் கிராமப்புறங்களுக்கு தொழில்நுட்ப அறிவையும் அதன் நன்மைகளையும் பரப்பும். இந்த மையங்கள் 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கும். IIT மெட்ராஸ் மற்றும் பிரவர்தக் டெக்னாலஜிஸ் அறக்கட்டளை இந்த திட்டத்திற்கு நிதியுதவி அளிக்கிறது. மேலும், தொழில்நுட்ப ஆதரவையும் எதிர்பார்ப்பதாக” ஐஐடி மெட்ராஸின் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இது குறித்து பேசிய ஐஐடி மெட்ராஸின் இயக்குனர் பேராசிரியர் வி காமகோடி., “நமது நாட்டின் கிராமப்புறங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு தரமான கல்வி மற்றும் தொழில்நுட்பம் குறித்த அறிவை வளர்க்கும் நோக்கத்தில் ஐஐடி மெட்ராஸ் உறுதியாக உள்ளது. தற்போது, இரண்டு கிராமங்களில் இரண்டு கிராமப்புற தொழில்நுட்ப மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இது எங்கள் திட்டத்தின் முதல் படியாகும்.

ஆஷா ஃபார் எஜுகேஷன் என்பது உலகளாவிய செயல் குழுவாகும், இது 2015 ஆம் ஆண்டு முதல் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளுடன் இணைந்து மாணவர்களுக்கு டிஜிட்டல் கல்வியறிவு மற்றும் கணக்கீட்டு சிந்தனை ஆகிய இரண்டிலும் கல்வி கற்பிக்கிறது.

நிரலாக்கத்தை கற்பிக்க இந்த குழுவானது மாசசூசெட்ஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி (MIT)-யின் ‘Scratch’ மற்றும் கூகுளின் ‘Blockly’ போன்ற மேம்பட்ட பிளாக் அடிப்படையிலான நிரலாக்க கருவிகளைப் பயன்படுத்துகிறது.

பள்ளி மாணவர்களுக்கான பயிற்சி முயற்சிகள் குறித்து ஆஷா ஃபார் எஜுகேஷன் நிறுவனத்தைச் சேர்ந்த ராஜாராமன் கிருஷ்ணன் பேசுகையில், “இந்தக் கருவிகள் பயன்படுத்த மிகவும் எளிதானவை என்பதால், நடுநிலைப் பள்ளி மாணவர்கள் சில வாரங்களில் இவற்றில் தேர்ச்சி பெற்று, கற்றலில் அதீத ஆர்வத்தை வெளிப்படுத்தியுள்ளனர். மற்ற நாடுகளில் வெற்றிகரமாகப் பயன்படுத்தப்பட்டு சோதனை செய்யப்பட்ட ‘code.org’ பாடத்திட்டம் போன்ற நிரூபிக்கப்பட்ட முறைகளைப் பயன்படுத்தி இந்த நிபுணத்துவத்தை உருவாக்க ஆஷா திட்டமிடப்பட்டுள்ளது. தரமான தொழில்நுட்பக் கல்வியில் IIT-யின் அனுபவத்தையும் நிபுணத்துவத்தையும் பயன்படுத்தவும் நாங்கள் உத்தேசித்துள்ளோம்.

“மேல்நிலைப் பள்ளிகளுக்கு அருகாமையில் உள்ள பகுதிகளில் இந்த மையங்களைத் திறக்க நாங்கள் திட்டமிட்டுள்ளோம். இதனால் மாணவர்கள் பள்ளி நேரத்துக்குப் பிறகு மாலையில் எங்கள் மையங்களில் வழங்கப்படும் படிப்புகளில் கலந்துகொள்ள முடியும். பெரும்பாலான குழந்தைகளுக்கு கணினி அறிவியல் மற்றும் பிற தொழில்நுட்பங்களைக் கற்க வாய்ப்பு கிடைப்பதில்லை. ஒருவேளை அவர்களுக்கு அந்த வாய்ப்பு கிடைத்தாலும், கணினியில் எந்த அனுபவமும் இல்லாத நபர்களால் கற்பிக்கப்படுகிறது. எங்கள் கிராமப்புற தொழில்நுட்ப மையங்களின் அனுபவம் மிக்க ஆசிரியர்களை கொண்டு மாணவர்களுக்கு கல்வி கற்பிக்கப்படும். இந்த திட்டம் கிராமப்புற மாணவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறோம்” என்று அவர் மேலும் கூறினார்.

Source: https://tamil.samayam.com/education/news/iit-madras-to-launch-rural-technology-centers-for-tamil-nadu-village-students/articleshow/89506155.cms