சென்னை திருவான்மியூர் ஓடைக்குப்பம் வாக்குச்சாவடி மையத்திற்குள், கத்தியுடன் சென்று வாக்கு இயந்திரங்களை உடைத்த விவகாரத்தில் திமுக பிரமுகர் உள்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தமிழக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்றுமுன்தினம் மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது.
ஹிஜாப்பை அகற்றச் சொன்ன பாஜக பூத் முகவர்.. தட்டித் தூக்கிய மதுரை போலீசார்.. 4 பிரிவுகளின் கீழ் வழக்கு
இதில் மாநிலம் முழுவதும் 60.70 % வாக்குகள் பதிவாகியுள்ளன… இவைகளில் குறைந்தபட்சமாக சென்னையில் 43.59% வாக்குகள் மட்டுமே பதிவானது.
இயந்திரங்கள்
வாக்குப்பதிவு நிறைவடைந்தவுடன் வாக்குச்சாவடி முகவர்கள் முன்னிலையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பெட்டிக்குள் வைத்து மூடி சீல் வைக்கப்பட்டன.. பின்னர் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பெட்டிகள் வாக்கு எண்ணும் மையங்களுக்கு எடுத்து செல்லப்பட்டது. மேலும் வாக்கு எண்ணும் மையங்களுக்கு 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை அதாவது பிப்ரவரி 22ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
வாக்குச்சாவடி
தேர்தல் அமைதியான முறையில் நடந்து முடிந்தாலும், சில இடங்களில் மட்டும் அசம்பாவித சம்பவங்கள் நடைபெற்றது… அந்த வகையில், திருவான்மியூர் ஓடைக்குப்பம் வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு இயந்திரத்தை திமுக பிரமுகர் சேதப்படுத்தியதாக கூறப்பட்டது… இது தொடர்பான செய்திகளும், போட்டோக்களும் சோஷியல் மீடியாவில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தின.
ரகளை – தகராறு
சென்னை ஒடைக்குப்பம் 179வது வார்டு பகுதியில் அதிமுக சார்பாக ஜமுனா கணேசனும், திமுக சார்பில் கயல்விழி என்பவரும் போட்டியிட்டனர்… ஆனால், வாக்குப்பதிவின்போது கதிர் என்ற திமுக பிரமுகர், கயல்விழியின் கணவர் ஜெயக்குமார் மற்றும் அடியாட்களுடன் வந்து வாக்கு இயந்திரத்தை சேதப்படுத்தியதாக கூறப்பட்டது.. மேலும், அங்கிருந்த வாக்காளர்களை உடனடியாக வெளியேறும்படி கூறி மிரட்டி தகராற்றில் ஈடுபட்டதாகவும் தெரிகிறது.. எனவே, இது சம்பந்தமாக திருவான்மியூர் போலீசிலும் புகார் தரப்பட்டது..
கைது
அந்த புகாரின்பேரில் போலீசாரும் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.. ஆனால், போலீசார் அங்கு செல்வதற்குள், தகராறு செய்த 2 பேரும் தப்பியோடி தலைமறைவாகிவிட்டனர்.. தற்போது, அராஜகத்தில் ஈடுபட்ட அந்த இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர். அவர்கள் மீது அரசாங்க சொத்தை சேதப்படுத்துதல், கொலை மிரட்டல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.. கைதானவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.
Source: https://tamil.oneindia.com/news/chennai/2-arrested-including-dmk-for-breaking-voting-machine-in-chennai-thiruvanmiyur-449477.html