சென்னை: அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி டெல்லியில் தனது நிகழ்ச்சிகளை பாதியிலேயே முடித்துக் கொண்டு இன்று காலை சென்னை திரும்புகிறார்.
பல்வேறு தடைகளுக்கு மத்தியில் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளராக கடந்த 11 ஆம் தேதி எடப்பாடி பழனிச்சாமி பொதுக் குழுவால் தேர்வு செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து அதிமுக வங்கிக் கணக்குகளை இயக்கும் உரிமை, அதிமுக அலுவலகத்தின் சாவி உள்ளிட்டவை எடப்பாடி பழனிச்சாமிக்கு கிடைத்தது.
தொடர் வெற்றிகளை குவித்ததால் எடப்பாடி பழனிச்சாமி மிகுந்த மகிழ்ச்சியில் இருந்தார். இந்த நிலையில்தான் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திற்கு பிரிவு உபசார விழாவில் கலந்து கொள்ள டெல்லிக்கு கடந்த வெள்ளிக்கிழமை புறப்பட்டுச் சென்றார்.
பட்டென திருப்பியடித்த செல்வப்பெருந்தகை.. கையெழுத்து யார் போட்டது.. விழித்த பாஜக -அதிமுக.. கூல் திமுக
பொதுச் செயலாளர்
இடைக்கால பொதுச் செயலாளர் ஆனவுடன் முதல்முறையாக டெல்லி சென்ற எடப்பாடி பழனிச்சாமி பல்வேறு திட்டங்களுடனேயே சென்றதாக தெரிகிறது. அதாவது சென்னையில் நடைபெறும் செஸ் ஒலிம்பியாட் நிகழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள சென்னைக்கு வருகை தரும் பிரதமர் மோடியை ஓபிஎஸ் சந்திக்க திட்டமிட்டிருந்தார்.
உரிமை
அப்போது அதிமுகவில் தனக்கான உரிமை, தலைமை பதவி உள்ளிட்டவை குறித்து விரிவாக பிரதமரிடம் பேச திட்டமிட்டிருந்தார். இந்த நிலையில் ஓபிஎஸ்ஸை முந்திக் கொண்டு டெல்லி சென்ற எடப்பாடி பழனிச்சாமி நேற்றைய தினம் ராம்நாத் கோவிந்த் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
முர்மு நிகழ்ச்சி
நாளை குடியரசுத் தலைவராக திரௌபதி பொறுப்பேற்கும் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டுவிட்டு நாளை மறுதினம் சென்னை திரும்ப திட்டமிட்டிருந்தார். இந்த இடைப்பட்ட காலத்தில் பிரதமர் மோடியையும் அமித்ஷாவையும் சந்திக்க நேரம் கேட்டிருந்ததாக தெரிகிறது. அப்போது குட்கா வழக்கு, அதிமுக அலுவலகத்தில் ஓபிஎஸ் வருகையின் போது நடந்த வன்முறை, சசிகலாவுடன் ஓபிஎஸ் கைகோர்க்க நினைப்பது உள்ளிட்டவை குறித்து பேசுவதற்காக இபிஎஸ் நேரம் கேட்டிருந்ததாக தெரிகிறது.
பிரதமர் மோடி
சென்னை வரும் பிரதமர் மோடியை ஓபிஎஸ் சந்தித்தாலும் அது எந்த வகையிலும் அவருக்கு பலனளிக்காதவாறு முன்கூட்டியே அனைத்து பணிகளையும் முடிக்க எடப்பாடி பழனிச்சாமி திட்டமிட்டிருந்தார். இந்த நிலையில் நாளை மறுநாள் சென்னை திரும்ப இருந்த எடப்பாடி பழனிச்சாமி இன்றைய தினம் பகல் 12.40 மணிக்கு ஏர் இந்தியா விமானத்தில் சென்னை திரும்புகிறார்.
பாதியில் முடித்த இபிஎஸ்
டெல்லி நிகழ்ச்சிகளை பாதியிலேயே முடித்துக் கொண்டு எடப்பாடி பழனிச்சாமி சென்னை திரும்புவது ஏன் என்பது குறித்து தகவலறிந்த வட்டாரங்களிடம் கேட்ட போது, “பிரதமர் மோடியும் அமித்ஷாவும் எடப்பாடியை சந்திக்க நேரம் ஒதுக்கவில்லை. இதனால் ஏற்பட்ட அதிருப்தி காரணமாக அவர் தனது பயண திட்டத்தை பாதியில் முடித்துக் கொண்டார்” என்றனர்.
ஓபிஎஸ் தரப்பு கொண்டாட்டம்
இதனால் ஓபிஎஸ் தரப்பு கொண்டாட்டத்தில் உள்ளனர். கடந்த ஜூன் 23 ஆம் தேதி அதிமுக பொதுக் குழு கூட்டத்தில் இபிஎஸ் தரப்பால் அவமானப்படுத்தப்பட்ட ஓபிஎஸ் நேராக டெல்லி சென்றார். அங்கு ஜூலை 11 இல் நடைபெற திட்டமிட்டிருந்த அதிமுகவின் மறு பொதுக் குழு குறித்தும் தலைமை பதவி குறித்தும் முறையிட பிரதமரையும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவையும் சந்திக்க நேரம் கேட்டிருந்தார். ஆனால் அவருக்கு நேரம் கிடைக்கவில்லை. இதனால் ஏமாற்றத்துடனேயே திரும்பியது குறிப்பிடத்தக்கது.
Source: https://tamil.oneindia.com/news/chennai/edappadi-palanisamy-disappoints-over-delhi-trip-467657.html