அபுஜா: உலகப்புகழ்பெற்ற மெட்ராஸ் துணியை நைஜீரியாவை சேர்ந்த கலாபரி பழங்குடியின மக்கள் இன்றளவும் தங்கள் பாரம்பரிய உடையாகவும், இதர தேவைகளுக்காகவும் பயன்படுத்தி வருகின்றனர்.
பல வடிவங்களிலும் வகைகளிலும் துணிகள், ஆடை வடிவமைப்புகள் உலகமெங்கும் உள்ளன. இதில் பல வடிவங்கள் ஒரு காலக்கட்டத்தில் தோன்றி பின்னர் அடியோடு அழிந்துவிடும். சில வடிவங்களும் சில துணிகள் மட்டுமே காலம் கடந்தும் மக்களின் வாழ்வோடு பின்னிப்பிணைந்து கலாச்சாரமாக மாறும். அப்படிப்பட்ட ஒரு துணிதான் மெட்ராஸ்.
இது நம்ம சென்னையோட பழைய பெயராச்சே என்று நீங்கள் யோசிக்கலாம். ஆம், கடந்த 17 வது நூற்றாண்டில் கிழக்கிந்திய நிறுவனத்தின் விற்பனை அலுவலகம் அப்போதைய மதராசப்பட்டினத்தில் அமைக்கப்பட்ட பிறகு, இந்த மெட்ராஸ் துணி பல நாடுகளுக்கு கப்பல் மூலமாக கொண்டு செல்லப்பட்டு விற்பனையாகி இருக்கின்றது.
இந்தியாவிலேயே டாப் சென்னை ஐஐடிதான்.. இன்டர்வியூவில் கலக்கிய மாணவர்கள்! ப்பா சம்பளம் என்ன தெரியுமா?
மெட்ராஸ் என்ற பெயருக்கு காரணம்
மதராசப்பட்டினத்திலிருந்து ஏற்றுமதிக்காக அனுப்பப்படும் பல பொருட்களில் மெட்ராஸ் துணி என்பது உலக நாட்டு மக்களை அதிகம் கவர்ந்தது. பழங்கால மெல்லிய பருத்தி துணியில் ஸ்காட்லாந்து ஆடை வடிவமைப்புகளின் தாக்கம் கொண்ட கட்டங்களை உடைய வடிவமைப்பே மெட்ராஸ் துணி என்று அழைக்கப்படுகிறது. மதராசப்பட்டினத்திலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்டதால் இதற்கு இந்த பெயர் கிடைத்தது.
நைஜீரிய பழங்குடிகள்
இந்த மெட்ராஸ் துணியை நைஜீரியா உள்ளிட்ட ஆப்பிரிக்க நாடுகளுக்கு அறிமுகம் செய்தது போர்ச்சுகீசியர்கள்தான். நூற்றாண்டுகளுக்கு முன் நைஜீரியாவுக்குள் நுழைந்த மெட்ராஸ், இன்று அந்நாட்டின் கலாபரி பழங்குடியின மக்களின் பாரம்பரிய ஆடையாகவே மாறிவிட்டது. இதனை கலாபரி பழங்குடி மக்கள் இஞ்சிரி என்று அழைக்கின்றனர். இதுவும் இந்தியாவிருந்து மருவிய வார்த்தை என்று கூறப்படுகிறது.
வாழ்வின் அங்கம்
கலாபரி மக்கள் இந்த மெட்ராஸ் துணியை கவுரவமாக கருதுகிறார்கள். இங்குள்ள ஆண்களும் பெண்கள் தங்கள் முக்கிய தருணங்களிள் மெட்ராஸ் துணியை அணிகிறார்கள். தாயின் கருவறையில் இருந்து கல்லறை வரை கலாபரி மக்களின் வாழ்வில் மெட்ராஸ் துணி என்பது வாழ்வின் அங்கமாகி இருக்கிறது. பிறந்தவுடன் மெட்ராஸ் துணி கொண்டே குழந்தையை சுற்றுகிறார்கள். குழந்தைக்கு பெயர் சூட்டும் விழாவில் தனது மகன் என அங்கீகரிக்க அதற்கு மெட்ராஸ் துணியை தந்தை அன்பளிப்பாக வழங்குகிறார்.
பயன்பாடுகள்
அதேபோல் இறுதிச்சடங்குகளின்போது சடங்குகளையும் மெட்ராஸ் துணியிலேயே கலாபரி மக்கள் கிடத்துகிறார்கள். இறந்தவர்களின் வீடுகளையும் சுவர்களையும் மெட்ராஸ் துணி மூலமாகவே மறைக்கிறார்கள். கிழக்கு ஆப்பிரிக்காவில் திருமணத்தின்போது மணமகளும் மெட்ராஸ் துணியால் தைக்கப்பட்ட ஆடையையே அணிவாராம்.
கானா குடிபெயர்வு
கடந்த 1983 ஆம் ஆண்டு நைஜீரியாவில் எண்ணெய் உற்பத்தி குறைந்த பிறகு, கோடிக்கணக்கான கானா மக்கள் நைஜீரியாவை விட்டு வெளியேற்றனர். அவர்கள் தங்கள் மூட்டை முடிச்சுகளை கட்டிக்கொண்டு செல்வதற்காக மெட்ராஸ் துணிகளால் தைக்கப்பட்ட பைகளையே பயன்படுத்தியதாக வரலாறு சொல்கிறது. இப்படி ஆப்பிரிக்க வரலாற்றில் ஆழமாக பதிந்து இருக்கிறது நம்ம ஊரு மெட்ராஸ் துணி.
இன்றும் என்றும் உலக டிரெண்ட்
ஆப்பிரிக்கா பழங்குடியின மக்களின் பாரம்பரியமான இந்த மெட்ராஸ் துணியை அனைத்து கண்டங்களில் வசிக்கும் மக்கள் இன்றும் பயன்படுத்தி வருகின்றனர். ஆடைகளை விற்பனை செய்யும் பிரபல இணையதளங்கள் MADRAS CHECKED SHIRTS என்று தேடினால் வகை வகையாக வந்து விழும். அட இதுதான் மெட்ராஸ் துணியா? நாமதான் யூஸ் பண்ணி இருக்கோமே என்று இதை பலரும் அதை தேடிய பிறகு உணர்வீர்கள்.
Source: https://tamil.oneindia.com/news/international/madras-fabric-is-indulged-in-africal-peoples-till-now-what-is-madras-checked-470267.html