சென்னை: சென்னையில் கடந்த ஜனவரி மாதம் முதல் ஜூன் மாதம் வரை காற்றின் தரம் நல்ல நிலையில் இருந்துள்ளது தெரியவந்துள்ளது.
இந்தியாவில் தேசிய தூய்மை காற்று திட்டத்தின் கீழ் (National Clean Air Programme) மூலம் பெரு நகரங்களில் காற்று மாசுபாடு குறித்து மக்களுக்கு விழிப்புணர்வும், காற்றில் உள்ள மாசுவை குறைக்கவும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தின்படி காற்றின் தரத்தை கண்காணிக்கவும், சுத்தமான காற்றை மக்கள் சுவாசிப்பதை உறுதி செய்யும் பல்வேறு நகரங்களில் நிகல் நேர காற்று மாசு கண்காணிப்பு மானி அமைக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் உள்ள டெல்லி, மும்பை, சென்னை, பெங்களூரு, பாட்னா, ஆக்ரா உள்ளிட்ட 10 நகரங்கள் காற்றின் தரம் பாதுகாப்பாக இல்லாத முதல் 10 நகரங்களாக கண்டறியப்பட்டது. இந்த நகரங்களில் காற்றின் தரத்தை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், நகரத்தில் கடந்த ஜனவரி மாதம் முதல் ஜூன் மாதம் வரையிலான காற்று மாசு தொடர்பான தகவல் வெளியாகி உள்ளது. இதன்படி இந்த 177 நாட்களில் டெல்லியில் 54 நாட்கள் மட்டுமே காற்று நல்ல நிலையில் இருந்ததாகவும். 127 நாட்கள் மேசமான நிலையில் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொல்கத்தாவில் 177 நாட்களில் 151 நாட்கள் மட்டுமே காற்று நல்ல நிலையிலும், 26 நாட்கள் மேசமான நிலையில் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹைதராபாத்தில் 177 நாட்களில் அனைத்து நாட்களிலும் காற்று நல்ல நிலையில் இருந்துள்ளது. மும்பையில் 151 நாட்கள் நல்ல நிலையிலும், 21 நாட்கள் மேசமான நிலையிலும் காற்றின் தரம் இருந்துள்ளது. பெங்களுரூவில் அனைத்து நாட்களும் காற்று நல்ல நிலையில் இருந்துள்ளது. சென்னையிலும் அனைத்து நாட்களிலும் காற்று நல்ல நிலையில் இருந்துள்ளது தெரியவந்துள்ளது.
Source: https://www.hindutamil.in/news/environment/858947-air-quality-status-good-in-chennai-city-india-national-clean-air-programme.html