சென்னை தப்பிக்க இவர்கள் தான் காரணம்: கள ரிப்போர்ட்! – Tamil Samayam

சென்னைச் செய்திகள்
சென்னையில் கடந்த இரு நாள்களுக்கும் மேலாக கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது. இதனால் பல இடங்களில் மழை நீர் தேங்கியுள்ளது. இந்த மாத தொடக்கத்தில் பெய்ததை விட அதிகமாக மழை பெய்து வருகிறது. சாலைகள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன. குடியிருப்புகளுக்குள்ளும் நீர் புகுந்ததால் மக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகியுள்ளனர்.

தேங்கியுள்ள மழைநீரை அப்புறப்படுத்தும் பணியில் மாநகராட்சி பணியாளர்கள் இரவு பகல் பாராமல் ஈடுபட்டுள்ளனர். இதனால் மழை நீர் தேங்கிய இடங்கள் சில மணி நேரங்களில் இயல்பு நிலைக்கு திரும்புவதை பார்க்க முடிகிறது.

சென்னை மாநகராட்சி 136 வார்டில் உள்ள ராஜ மன்னார் சாலையில் மழைநீர் வடிகால் பணிகள் தொடர்ந்து நடைபெறுகிறது. இந்த வார்டில் நிர்வாக பொறியாளராக பணியாற்றும் ஆர்.கோபி தலைமையில் வடிகால் பணிகள் நடைபெற்று வருகின்றன. இரவு பகல் பாராமல் தொடர்ந்து பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

“இந்த சாலை பேருந்துகள் செல்லும் சாலையாக இருப்பதாலும், பல்வேறு சாலைகளுக்கு இணைப்பு சாலையாக இருப்பதாலும் இதற்கு சிறப்பு கவனம் செலுத்துகிறோம். முதலமைச்சரின் ஆணைப்படி மழைநீர் எந்த இடத்திலும் தேங்காதவாறு நடவடிக்கை எடுக்கிறோம்” என ஆர்.கோபி டைம்ஸ் ஆஃப் இந்தியாவுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

செவ்வாய்க் கிழமை பணிக்கு வந்தவர் இன்னும் வீடு திரும்பவில்லை. தொடர்ந்து பணிகளை ஒருங்கிணைத்து வருகிறார். பணி நடைபெறும் இடத்தின் அருகிலேயே சாப்பிட்டு, அலுவலகத்திலேயே தூங்கி மீண்டும் பணியை தொடர்கிறார்.

கோபி மட்டுமல்லாமல் இது போல் பல அதிகாரிகள், ஊழியர்கள் தொடர்ந்து களத்திலேயே நிற்பதால் சென்னை தொடர் மழையை தாக்குப் பிடித்து நடைபோடுகிறது.
சென்னையில் தேங்கிய மழை நீர்: இரவு பகல் பாராமல் களத்தில் நிற்கும் மாநகராட்சி ஊழியர்கள்!
சென்னையில் மேற்கொள்ளப்படும் மழைநீர் வடிகால் பணிகளை நேற்று இரவு முதல்வர் ஸ்டாலின் ஆய்வு செய்தார். அது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில், “மழை வெள்ளம் போன்ற பேரிடர் காலத்தில் மக்களைக் காக்கும் மகத்தான பணியில் தங்களை ஒப்படைத்துக் கொண்டு இருப்பவர்கள் அரசு மற்றும் உள்ளாட்சிப் பணியாளர்களே! சென்னையில் தண்ணீர் தேங்கவில்லை; தேங்கினாலும் உடனே வெளியேற்றப்பட்டு விடுகிறது என்று பொதுமக்கள் அரசை வாழ்த்துகிறார்கள் என்றால் அதற்கு முக்கியக் காரணம் இப்பணியாளர்களின் இடைவிடாத பணியே! அடாத மழையிலும் விடாது பணியாற்றும் அந்த ஊழியர்களுக்கு மக்கள் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMiuAFodHRwczovL3RhbWlsLnNhbWF5YW0uY29tL2xhdGVzdC1uZXdzL3N0YXRlLW5ld3MvY2hlbm5haS1tdW5pY2lwYWwtY29ycG9yYXRpb24tZW1wbG95ZWVzLWFuZC1vZmZpY2lhbHMtYXJlLWNvbnRpbnVvdXNseS13b3JraW5nLWRheS1hbmQtbmlnaHQtaW4tdGhlLWhlYXZ5LXJhaW4vYXJ0aWNsZXNob3cvOTU0NjgzMjMuY21z0gEA?oc=5