ஒப்பந்ததாரர்களுக்கு அளிக்க வேண்டிய ரூ.70 கோடி சென்னை மாநகராட்சி நிறுத்தி வைப்பு – தினகரன்

சென்னைச் செய்திகள்

சென்னை: சென்னையில் கடந்த 2021ம் ஆண்டு பெய்த கனமழையால் பல பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டது. மழை பாதிப்புகளை எதிர்கொள்ளும் வகையில், மழை நீர் வடிகால்கள் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. அதன்படி, சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் ரூ. 277.04 கோடியிலும், வெள்ள நிவாரண நிதியின் கீழ் ரூ.295.73 கோடியிலும், உட்கட்டமைப்புகள் மற்றும் வசதிகள் நிதியின் கீழ் ரூ.27.21 கோடியிலும், மூலதன நிதியின் கீழ் ரூ.8.26 கோடியிலும், உலக வங்கியின் நிதியின் கீழ் விடுபட்ட இடங்களில் ரூ.120 கோடியிலும் பல்வேறு பகுதிகளில் மழைநீர் வடிகால்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்றது.

மேலும், ஆசிய வளர்ச்சி வங்கி நிதி உதவியின் கீழ் கொசஸ்தலையாறு வடிநில பகுதிகளில் ரூ.3,220 கோடியில் 769 கிலோ மீட்டர் நீளத்திற்கும், ஜெர்மன் பன்னாட்டு வங்கி நிதி உதவியின் கீழ் கோவளம் வடிநில பகுதிகளில் ரூ.1,714 கோடியில் 360 கிலோ மீட்டர் நீளத்திற்கும் புதிய மழைநீர் வடிகால்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்றது. இதைத் தவிர, நெடுஞ்சாலை மற்றும் நீர்வளத் துறைகள் மூலம் புதிய மழைநீர் வடிகால் அமைக்கப்பட்டு வருகின்றன. இதையடுத்து, 1,300 கி.மீ., நீளமுள்ள மழைநீர் வடிகால்கள் தூர்வார ரூ.70 கோடியில் ஒப்பந்ததாரர்களுக்கு பணியாணை வழங்கப்பட்டு, நீர்நிலைகள், வண்டல் வடிக்கட்டி தொட்டிகள், கால்வாய்களில் ஆகிவற்றில் தூர்வாரும் பணியை மேற்கொண்டு வருகின்றனர்.

இதன் காரணமாக சமீபத்தில் பெய்த கனமழையால் பெரும்பாலான பகுதிகள், சாலைகளில் மழை நீர் தேங்கவில்லை. இந்நிலையில், தூர்வாரும் பணிகளில் ஈடுபட்டுள்ள ஒப்பந்ததாரர்களுக்கான தொகையை மாநகராட்சி நிறுத்தி வைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்து, சென்னை மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், \”சென்னையில் பெரும்பாலான இடங்களில் அதிக கனமழை பெய்த ஓரிரு மணி நேரத்திற்குள் நீர் வடிந்து விடுகிறது. சில தாழ்வான பகுதிகளில் மட்டுமே மழைநீர் தேக்கம் உள்ளது. மழைநீர் தேக்கம் ஏற்பட்ட பகுதிகளில் தீர்வு ஏற்படுத்தி, மீண்டும் நீர் தேக்கம் ஏற்படாமல் இருக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

வண்டல் வடிகட்டி தொட்டிகள், நீர்நிலைகள் என டிசம்பர் மாத இறுதி வரை தூர்வார, ஒப்பந்தாரர்களுக்கு அறிவுறுத்தி உள்ளோம். தொடர் மழைக்குப் பின், குறிப்பிட்ட காலம் இடைவெளி கிடைக்கும்போது, அடுத்த மழையை சமாளிக்கும் வகையில், தூர்வாரும் பணியை மேற்கொள்ள அறிவுறுத்தி உள்ளோம். இதற்காக, ஒப்பந்ததாரர்களுக்கான ரூ.70 கோடியை மாநகராட்சி நிறுத்தி வைத்துள்ளது. முறையாக தூர்வாரமல், மழைநீர் தேக்கத்திற்கு காரணமாக ஒப்பந்தாரர் இருந்தால், அதில் சிக்கல் ஏற்படும், அதனால் அவர்களுக்கான தொகையை நிறுத்தி வைத்துள்ளோம். இவ்வாறு தெரிவித்தனர்.

Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMiNGh0dHBzOi8vd3d3LmRpbmFrYXJhbi5jb20vbmV3c19kZXRhaWwuYXNwP05pZD04MTczMjfSATZodHRwczovL20uZGluYWthcmFuLmNvbS9hcnRpY2xlL05ld3NfRGV0YWlsLzgxNzMyNy9hbXA?oc=5