சென்னை: சென்னையில் போக்குவரத்து சீராக இயங்கி வருவதாக சென்னை காவல் துறை தெரிவித்துள்ளது.
மாண்டஸ் புயல் கரையை கடந்துள்ள நிலையில், சென்னையில் மீட்பு பணியில் சென்னை மாநகராட்சி, காவல் துறை உள்ளிட்ட அனைத்து துறையினரும் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், சென்னையில் போக்குவரத்து நிலைமை குறித்து சென்னை காவல் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “சென்னையில் மழைநீர் பெருக்கு காரணமாக எந்த சுரங்க பாதையும் மூடப்படவில்லை. சாலைகளில் போக்குவரத்து தடை செய்யப்படவில்லை. போக்குவரத்து வழக்கம் போல் அனுமதிக்கப்பட்டு வருகிறது.
தெற்கு மற்றும் கிழக்கு மண்டலத்தில் 101 மரங்களும், வடக்கு மற்றும் மேற்கு மண்டலத்தில் 26 மரங்களும் சாலைகளில் விழுந்துள்ளன. சென்னை பெருநகர காவல் துறை ஒருங்கிணைப்புடன் 100 மரங்கள் அப்புறப்படுத்தப்பட்டன. மீதமுள்ள மரங்கள் அப்புறப்படுத்தும் பணி துரிதமாக நடைபெற்று வருகிறது. 5 மின்கம்பங்கள் சாலைகளில் விழுந்துள்ளன. 4 மின்கம்பங்கள் அப்புறப்படுத்தப்பட்டன. 1 மின்கம்பங்கள் அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMiW2h0dHBzOi8vd3d3LmhpbmR1dGFtaWwuaW4vbmV3cy90YW1pbG5hZHUvOTEyNDc1LXRyYWZmaWMtaXMtYWxsb3dlZC1hcy11c3VhbC1pbi1jaGVubmFpLmh0bWzSAQA?oc=5