இந்த கொடுமைய முதல்ல ஒழிக்கணும்.. தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு! – Tamil Samayam

சென்னைச் செய்திகள்

ஹைலைட்ஸ்:

  • மனித கழிவுகளை மனிதர்களே அகற்றும் முறையை ஒழிக்க வேண்டும்
  • தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

தமிழகத்தில் கழிவுகளை அகற்ற மனிதர்களை பயன்படுத்தும் கொடிய நடைமுறையை முழுவதுமாக ஒழிக்க அர்த்தமுள்ள நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பாதாளச் சாக்கடைகள், கழிவுநீர் தொட்டிகள் சுத்தம் செய்வதில் மனிதர்களை பயன்படுத்தக் கூடாது, விஷவாயு தாக்கி உயிரிழந்தவர்கள் நிவாரணம் பெறுவதை உறுதி செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்து சபாய் கர்மாச்சாரி அந்தோலன் என்ற அமைப்பின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டிருந்தது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் அமைப்பின் சார்பில் அளிக்கப்பட்ட ஆலோசனைகள் குறித்த அறிக்கை தமிழக அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்டது.

கொட்டும் மழையில் ஆய்வு.. எனக்கு இது புதுசு இல்ல.. முதல்வர் ஸ்டாலின் நச் பதில்!
தமிழகத்தில் எந்த மாநகராட்சியிலும் கழிவுகளை அகற்ற மனிதர்கள் ஈடுபடுத்தப்படுவதில்லை என அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. கழிவுகளை சுத்தம் செய்யும் தொழிலாளர்கள் வேறு வேலைகளுக்கு செல்ல முடியாது என்ற மனநிலையை மாற்ற வேண்டுமெனவும், அவர்கள் எந்தவொரு வேலைக்கும் செல்லலாம் என்ற விழிப்புணர்வையும் ஏற்படுத்த வேண்டியது அரசின் கடமை என நீதிபதிகள் தெரிவித்தனர்.

மேலும், பாதாள சாக்கடைகளில் கழிவுகளை அகற்றும் போது பலியானவர்களுக்கு வழங்கப்படும் 10 லட்சம் ரூபாய் இழப்பீடு போதாது என்பதால் அதை அதிகரித்து வழங்குவது குறித்து பரிசீலிக்க வேண்டும் என அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

கழிவுகளை அகற்ற மனிதர்களை ஈடுபடுத்துவோருக்கு கடுமையானஅபராதம் விதிப்பது போன்ற நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும், கழிவுகளை மனிதர்கள் அகற்றும் நடைமுறையை முழுமையாக ஒழிக்க அர்த்தமுள்ள நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Source: https://tamil.samayam.com/latest-news/state-news/madras-high-court-directs-tamilnadu-govt-to-completely-eradicate-manual-scavenging/articleshow/87625705.cms