சென்னை: ஈசிஆர் சாலையில் ஊர்மக்கள் பயன்படுத்தி வந்த திடல் ஆக்கிரமிக்கப்பட்டது தொடர்பாக அதிகாரிகள் மற்றும் அரசியல் கட்சியினர் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததை தொடர்ந்து பொதுமக்கள் கிழக்கு கடற்கரை சாலையை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து ஸ்தம்பித்தது.
சென்னை கிழக்கு கடற்கரை சாலையோரம் அமைந்துள்ளது கானத்தூர். அதன் அருகே ஈசிஆர் சாலையில் உத்தண்டி சுங்கச்சாவடி உள்ளது.
இங்குள்ள மந்தகல் திடல் என்ற பகுதியை பொதுமக்கள் காலம் காலமாக பயன்படுத்தி வந்துள்ளனர்.
ஆதிதிராவிடர் சுடுகாடு அருகே குப்பை கொட்டும் அதிராம்பட்டினம் நகராட்சி… ஈசிஆர் சாலையோரம் குப்பை மலை
நிலம் ஆக்கிரமிப்பு
இந்த நிலையில் அப்பகுதியை சிலர் ஆக்கிரமிப்பு செய்ததாக கூறப்படுகிறது. அப்பகுதியை ஆக்கிரமித்து கட்டப்பட்டு இருந்த மதில் சுவற்றை இடிக்க வேண்டும் என ஊர் பொதுமக்கள் ஒன்றுகூட தீர்மானம் நிறைவேற்றினர். அதன் அடிப்படையில் மந்தகல் திடலில் அமைக்கப்பட்டிருந்த மதில் சுவற்றை அவர்கள் இடித்தனர்.
பேச்சுவார்த்தை
தகவல் அறிந்த கேளம்பாக்கம் உதவி ஆணையர் ரவிக்குமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அப்பகுதி மக்களிடையே பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார். அப்பொழுது அங்கு வந்த சில அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்களை மரியாதை குறைவாக பேசியதாக கூறப்படுகிறது.
சாலை மறியல்
இதனை கண்டித்து பொதுமக்கள் ஈசிஆர் சாலையில் வாகனங்களை மறித்து மறியலில் ஈடுபட்டனர். விடுமுறை நாளான இன்று பலரும் வெளியூர்களில் இருந்து சென்னைக்கும், சென்னையிலிருந்து வெளியூர்களுக்கும் சென்று வரும் நிலையில், சாலை மறியல் போராட்டம் காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
போக்குவரத்து பாதிப்பு
இதனால் கிழக்கு கடற்கரை சாலையில் புதுச்சேரியிலிருந்து சென்னைக்கு வரக்கூடிய மார்கத்திலும், சென்னையிலிருந்து புதுச்சேரி செல்லக்கூடிய மார்கத்திலும் வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. நீண்ட நேரமாக போக்குவரத்து சீராகாத நிலையில் போலீசார் அங்கு வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது கார்கள் வந்த மக்கள் பலர் அதன் மீது ஏறி நின்று போராட்டத்தை பார்வையிட்டனர்.
Source: https://tamil.oneindia.com/news/chennai/kanathur-people-protest-in-ecr-road-and-create-huge-traffic-jam-475154.html