சென்னை: சென்னையில் ஒரு பைக்கில் ஒருவருக்கு மேல் பயணிக்க கூடாது என போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.
சென்னையில் கொரோனா பாதிப்பை தடுக்க கடந்த 10ம் தேதி முதல் முழு ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. ஆனால் அதனை கண்டு கொள்ளாமல் வாகனங்களில் பொதுமக்கள் வெளியில் சுற்றுவது அதிகரித்துள்ளது.
ஜூன் மாதத்தில் கொரோனா உச்சத்திற்கு வரும் – உயிரிழப்பை குறைக்க வேண்டும் – மு.க ஸ்டாலின்
இந்த நிலையில்தான், ஊரடங்கு உத்தரவை மேலும் 2 வாரங்கள் நீட்டிக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
வழக்குகள்
வெளியில் சுற்றுபவர்கள் மீது தினமும் வழக்குப்பதிவு செய்து வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் 3,744 வழக்குகள் பதிவு செய்யப்பட்ட நிலையில் 4,461 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன. முகக்கவசம் அணியாத 3,592 பேர் மீதும், சமூக இடைவெளியை கடைபிடிக்காத 387 பேர் மீதும் வழக்கு பதியப்பட்டது.
பைக்கில் நிறைய பேர்
விதிமுறைகளை மீறிய 89 கடைகள் மூடப்பட்டு ரூ.10 லட்சத்து 12 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளதாக மாநகராட்சி புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. கொரோனா முழு ஊரடங்கு என்பதே சமூக இடைவெளி இருக்க வேண்டும் என்பதற்காகத்தான். ஆனால் அதை மதிக்காமல் பைக்குகளில், 2 பேர் சர்வசாதாரணமாக வெளியில் சுற்றுவதை பார்க்க முடிகிறது. சிலர் 3 பேர் வரையிலும் ஒரே பைக்கில் பயணிக்கிறார்கள்.
மனைவியுடனும் போகாதீர்கள்
இடைவெளியை கடை பிடிக்காமல் பயணிப்பதால் கொரோனா தொற்று அதிகரிக்கும் ஆபத்து உள்ளதால், சென்னையில் பைக்குகளில் 2 பேர் செல்வதற்கு தடைவிதிக்கப்பட்டு உள்ளதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தெரிவித்தனர். மனைவியை ஏற்றிக்கொண்டு பைக்கில் செல்வோருக்கும் இந்த விதிமுறை பொருந்தும். காய்கறி வாங்க வேண்டுமானால் ஒருவர் மட்டுமே வெளியில் வர வேண்டும் என்று அறிவுரை வழங்கி வருகிறார்கள் போலீசார்.
பைக்கில் சுற்றினால் நடவடிக்கை
அதேநேரம், தேவையில்லாமல் மோட்டார் சைக்கிளில் வெளியில் சுற்றும் இளைஞர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அவர்கள் மீது சமூக இடைவெளியை கடைபிடிக்காத குற்றத்திற்காக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஊரடங்கின்போதும் பைக்கில் 2 பேர் செல்ல தடை விதித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
Source: https://tamil.oneindia.com/news/chennai/don-t-travel-with-more-than-2-people-on-a-bike-in-chennai-421683.html