சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.
சென்னை,
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பெரும்பாலான மாவட்டங்களில் மிதமானது முதல் கனமழை பெய்து வருகிறது.
இந்நிலையில், வடதமிழ்நாட்டை ஓட்டி ஆந்திர பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக நீலகிரி, கோவை மாவட்டங்களில் இன்று ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும்.
தேனி, திண்டுக்கல், நெல்லை, கன்னியாகுமாரியில் இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் மேலும் அடுத்த 24 மணி நேரத்திற்கு புறநகர் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடியலேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.
இந்தநிலையில், கிண்டி, அசோக்நகர், தி.நகர், பெருங்களத்தூர், வண்டலூர், கூடுவாஞ்சேரி, வேளச்சேரி, குன்றத்தூர், மடிப்பாக்கம், போரூர், குரோம்பேட்டை, பல்லாவரம், மீனம்பாக்கம், பம்மல். அம்பத்தூர், பாடி, கொரட்டூர், திருமுல்லைவாயல் பட்டாபிராம் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது.
Source: https://www.dailythanthi.com/News/State/2021/08/29151157/Rain-in-Chennai-and-suburbs.vpf