குடிச்சுட்டு வண்டி ஒட்டுறவங்கள கைது பண்ணுங்க.. சென்னை ஹைகோர்ட் அதிரடி உத்தரவு – Oneindia Tamil

சென்னைச் செய்திகள்

சென்னை: மது போதையில் வாகனம் ஓட்டுவோரை கைது செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சாலை விபத்தில் காயமடைந்த மணிகண்டன் என்பவர், தனக்கு வழங்கப்பட்ட 4 லட்சத்து 37 ஆயிரத்து 950 ரூபாய் இழப்பீட்டுத் தொகையை அதிகரித்து தரக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இந்த வழக்கு நீதிபதி கிருபாகரன் மற்றும் அப்துல் குத்தூஸ் அடங்கிய அமர்வு முன்பு விசாரணையின்போது, மனுதாரர் மதுபோதையில் வாகனம் ஓட்டி சென்றதாகவும், அவர் தற்போது எந்த ஊனமும் இல்லாமல் நல்ல முறையில் இருப்பதாகவும் காப்பீட்டு நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப் பட்டது.

உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் படி, பாதிக்கப்பட்ட மணிகண்டன் சக்கர நாற்காலியில் அழைத்து வரப்பட்டார். அவரை பரிசோதித்த சென்னை அரசு பொது மருத்துவமனை மருத்துவர்கள், மூளையில் அடிபட்ட அவர் 100 சதவீதம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மருத்துவர்கள் அறிக்கை அளித்தனர்.

அதன் அடிப்படையில் மணிகண்டனுக்கு வழங்கப்பட்ட 4 லட்சத்து 37 ஆயிரம் ரூபாய் இழப்பீட்டுத் தொகையை 67 லட்சத்து 35 ஆயிரம் ரூபாயாக அதிகரித்து வழங்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மதுவினால் ஏற்படும் தீங்குகள் மற்றும் பாதிப்புகளை பட்டியலிட்ட நீதிபதிகள், மதுபோதையில் வாகனம் ஓட்டிச் செல்வதை கண்காணிக்க தனிப்படைகளை அமைக்க வேண்டும் என அரசுக்கு உத்தரவிட்டனர்.

மேலும் மது போதையில் வாகனம் ஓட்டிச் செல்பவர்களை கைது செய்ய வேண்டும் எனவும், அவர்களின் ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் எனவும் நீதிபதிகள் தங்கள் உத்தரவில் வலியுறுத்தியுள்ளனர்.

வாகன ஓட்டிகள் மதுபோதையில் செல்கிறார்களா இல்லையா என்பதை கண்டறிய போதுமான அளவுக்கு மூச்சுப் பரிசோதனை கருவிகளை காவல்துறைக்கு வழங்க வேண்டும் எனவும் நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

மது போதையில் வாகனங்களை இயக்க முடியாதபடி, வாகனங்களில் பிரத்யேக கருவிகளை பொருத்தும்படி, வாகன உற்பத்தியாளர்களுக்கு உத்தரவிடுவது குறித்து பரிசீலிக்க வேண்டும் எனவும் மத்திய அரசுக்கு நீதிபதிகள் யோசனை தெரிவித்துள்ளனர்.

அதேபோல மதுபோதையில் வாகனம் ஓட்டி சென்றதாக மாதந்தோறும் எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன? எத்தனை பேர் கைது செய்யப்பட்டனர்? என்பது குறித்த விவரங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், இந்த வழக்கின் விசாரணையை ஏப்ரல் 6ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

Source: https://tamil.oneindia.com/news/chennai/madras-high-court-says-police-should-arrest-who-drunken-drive-379628.html