தமிழகம் முழுவதும் லாக் டவுன்.. 144 தடை உத்தரவு.. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி முக்கிய அறிவிப்பு – Oneindia Tamil

சென்னைச் செய்திகள்

சென்னை: தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களும் லாக் டவுன் செய்யப்படுகிறது என்றும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படுதாகவும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவு பிறப்பித்துள்ளார். ‘

image

லாக் டவுன் விதிகள் என்ன? எந்த சேவைகள் இயங்கும்?

மானியக்கோரிக்கை மீதான விவாதம் சட்டப்பேரவையில் இன்றுடன் நடந்து முடிந்தது. இறுதியாக கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார். அப்போது அவர் பேசுகையில்,

“கொரோனா வைரஸ் தொற்றை தடுக்க தமிழக அரசு தீவிர பாதுகாப்பு நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு வருகிறது. இந்தியாவில் கொரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்ட நபர்கள் உள்ள 75 மாவட்டங்களில் தீவிர நோய் கண்காணிப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையில் சில வழிமுறைகளை மத்திய அரசு பரிந்துரைத்துள்ளது. தனிமைப்படுத்துதல் ( social distancing) என்ற முறையை தீவிரப்படுத்த, நோய் பாதித்த நபர்கள் உள்ள மாவட்டங்களில் சில கடுமையான நடவடிக்கைகளை தற்போது மேற்கொள்வது அவசியமாகிறது. இதனை கருத்தில் கொண்டு கீழ்க்கண்ட முடிவுகளை இந்த பேரவையின் வாயிலாக வெளியிட விரும்புகிறேன்.

நாளை மாலை முதல்

மத்திய அரசால் கொரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்ட நபர்கள் உள்ள மாவட்டங்களான சென்னை காஞ்சிபுரம், ஈரோடு உள்பட தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் போக்குவரத்து மற்றும் பொதுமக்களின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்த தொற்று நோய்கள் சட்டம், 1997ல் ஷரத்து 2ன்படி மாவட்ட எல்லைகளை மூட உத்தரவிடப்படுகிறது. இதற்கான விரிவான அறிவிக்கை இன்று மாலை வெளியிடப்படும். இந்த உத்தரவு நாளை மாலை 6 மணி முதல் தொடங்கி 31.3.2020வரை நடைமுறையில் இருக்கும். இந்த அறிவிக்கையை தீவிரமாக அமல்படுத்த அனைத்து காவல் ஆணையர்களுக்கும், மாவட்ட ஆட்சி தலைவர்களுக்கும் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 144 கீழ் உரிய உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும்.‘ இந்த உத்தரவின் படி கீழ்க்கண்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன

பேருந்து இயங்காது

அத்தியாவசிய மற்றும் அவசரப்பணிகள் தவிர மற்ற பொது போக்குவரத்து, தனியார் போக்குவரத்து, மகிழுந்துகள், ஆட்டோ, டாக்ஸி போன்றவை இயங்காது.மாநிலங்களுக்கு இடையேயும் மாவட்டங்களுக்கு இடையேயும் ஆன போக்குவரத்து அத்தியாவசிய இயக்கத்திற்கு தவிர மற்ற இயக்கம் முற்றிலும் தடை செய்யப்படுகிறது.

இறைச்சி கடைகள்

அத்தியாவசியப் பொருட்களுக்கான, பால், காய்கறி, மளிகை, இறைச்சி, மீன் கடைகள் போன்றவை தவிர அனைத்து கடைகளும், வணிக வளாகங்களும், பணிமனைகளும் இயங்காது.

அரசு துறைகள்

அத்தியாவசியத்துறைகள் மற்றும் அலுவலகப் பணிகள் தவிர மற்ற அரசு அலுவலங்கள் செயல்படாது. அத்தியாவசியப் பணிகளை மேற்கொள்ளும் அரசுத் துறைகளான மாவட்ட நிர்வாகம், காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை, சிறைத்துறை பொது சுகாதாரம் மற்றும் மருத்துவ துறை, நீதிமன்றங்கள், உள்ளாட்சி அமைப்புகள் போன்றவை தொடர்ந்து இயங்கும். எனினும் தனிநபர் சுகாதார நடவடிக்கை உள்பட அனைத்து நோய்த்தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் அலுவலகங்களில் பின்பற்றப்பட வேண்டும்.

மருத்துவமனைகள் இயங்கலாம்

தனியார் நிறுவனங்கள் தகவல் தொழில்நுட்ப மற்றும் உயிர் தொழில்நுட்ப தொழில் அலுவலகப் பணியாளர்கள் வீட்டில் இருந்தே வேலை செய்ய வேண்டும். எனினும் அத்தியாயவசிய பணிகளையும் மருத்துவம் உள்ளிட்ட பணிகளையும் மேற்கொள்ளும் தனியார் நிறுவனங்கள், மருத்துவமனைகள் தொடர்ந்து இயங்கும்.

அத்தியாவசிய தொழிற்சாலைகள்

அத்தியாவசிய பொருட்களை தயாரிக்கும் தொழிற்சாலைகள் மற்றும் ஏற்றுமதி நிறுவனங்கள் குறைந்த பணியாளர்களுடன் இயங்க அனுமதிக்கப்படுகிறது. அத்தியாவசிய கட்டடப்பணிகள் தவிர பிற கட்டப் பணிகளுக்கு தடை விதிக்கப்படுகிறது. எனினம் இந்த நாட்களில் வேலைக்கு வராத தொழிலாளர்களுக்கு சம்பள நிறுத்தம் செய்யக்கூடாது.

பார்சல் மட்டுமே

வீடுகளில் இல்லாமல், விடுதிகள் மற்றும் பிற இடங்களில் தங்கியிருக்கும் பல்லாயிரக்கணக்கான பணியாளர்களின் நலன் கருதி பார்சல் மூலம் மட்டும் உணவு வழங்கும் வகையில் உணவங்கள் திறந்திருக்க அனுமதிக்கப்படும்.

மருத்துவ பரிசோதனை

வெளிநாடுகளில் இருந்து வந்துள்ள நபர்கள் சுயமாகவே தங்களை தனிமைப்படுத்தி கொண்டு , நோய் அறிகுறி வருகிறதா என்பதை கண்காணித்து அரசு மருத்துவமனைகள் மூலமோ அனுமதிக்கப்பட்ட தனியார் மருத்துவமனைகள் மூலமோ மருத்துவ பரிசோதனைகள் மேற்கொண்டு நோய் பாதிப்பு உறுதியானால் உரிய மருத்துவ சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் அதற்கு குடும்ப உறுப்பினர்கள் நோய் தொற்று ஏற்படாத வண்ணம் செயல்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இது போன்ற நடவடிக்கை இந்த கடுமையான தொற்று நோய் மற்ற குடும்ப உறுப்பினர்களும் மற்றவர்களுக்கும் பரவாமல் தடுக்க பேருதவியாக இருக்கும் என்பதை நாம் அனைவரும் உணர வேண்டும். வெளிநாடு சென்று திரும்பிய நபர்களுடன் நேரடி தொடர்பு இல்லை என்றாலும் இந்நோய் தொற்றின் கடுமையை உணர்ந்து நோய் தொற்று ஏற்பட்டிருக்க வாய்ப்பு உள்ளதை கருத்தில் கொண்டு இந்த நோய்க்கான அறிகுறி உள்ளவர்கள் உடனடியாக அரசு மருத்துவமனையோ அல்லது அனுமதிக்கப்பட்ட தனியார் மருத்துவமனைகள் மூலமோ மருத்துவ பரிசோதனை செய்து கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.

மாவட்ட ஆட்சியர்கள்

தடை உத்தரவால் கர்ப்பிணிப் பெண்கள், முதியோர் ஆகியோருக்கு ஏற்படும் இடையூறுகளை அறிந்து அவற்றை தணிக்க உரிய நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சி தலைவர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள். இத்தடை காலத்தில் அத்தியாவசிய பொருட்களான உணவுப் பொருட்கள், மருந்துப் பொருட்கள் போன்றவற்றின் போக்குவரத்துக்கும், விற்பனைக்கும் எந்த ஒரு தடையும் இல்லை.

முதல்வர் அறிவிப்பு

நோய் தடுப்பு நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்குவது பற்றி தமிழக அரசு பரிசீலித்து வருகிறது. இதற்கான ஆணைகள் தனியே வெளியிடப்படும். கொரோனா தொற்று நோய் பரவுவதை தடுக்க இந்த அரசு எடுத்து வரும் கடுமையான நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்” இவ்வாறு கூறினார்.

Source: https://tamil.oneindia.com/news/chennai/chennai-kanchipuram-erode-may-lock-down-tn-cm-palanisamy-discussing-with-minsters-now-380560.html