சென்னை: நாளை ஞாயிற்றுக்கிழமை முழு கொரோனா ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அன்று புறநகர் ரயில்கள் இருக்குமா என்பது குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு மின்னல் வேகத்தில் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. நேற்றைய தினம் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 9 ஆயிரத்தை நெருங்கியது. அதேபோல ஆக்டிவ் கேஸ்களின் எண்ணிக்கையும் 30 ஆயிரத்தைக் கடந்துள்ளது
ஓமிக்ரான் பரவல் காரணமாகவே வைரஸ் கேஸ்களின் எண்ணிக்கை உயரத் தொடங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து கொரோனா பாதிப்பைக் குறைக்கு பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
மத்திய அரசு அறிவிப்பு
இது தொடர்பாகத் தேவையான வைரஸ் பாதிப்பு கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு மத்திய அரசும் அனைத்து மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தியுள்ளது. அதேபோல தமிழ்நாடு அரசு சார்பிலும் பல்வேறு கட்டுப்பாடு நடவடிக்கைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி மாநிலம் முழுவதும் இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை இரவு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
ஞாயிறு முழு ஊரடங்கு
அதேபோல ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்றும் தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நேரத்தில் அத்தியாவசிய பணிகளைச் செய்ய மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனிடையே சென்னையில் நாளை, ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு காரணமாகத் தமிழக அரசின் கீழ் இருக்கும் பஸ் போக்குவரத்து சேவையும், மெட்ரோ ரயில் சேவையும் இருக்காது என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.
புறநகர் ரயில் சேவை
நாளை முழு ஊரடங்கு சமயத்தில் புறநகர் ரயில் இருக்குமா என்ற கேள்வி பொதுமக்களிடையே எழுந்தது. இந்நிலையில் இது தொடர்பாகச் சென்னை ரயில்வே கோட்ட மேலாளர் முக்கிய உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளார். அதாவது ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கின் சமயத்திலும் சென்னை புறநகர் ரயில் சேவைகள் கொரோனா கட்டுப்பாடுகளுடன் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வழித்தடங்கள்
அதன்படி சென்னை – அரக்கோணம், சென்னை – கும்மிடிப்பூண்டி, சென்னை – வேளச்சேரி, சென்னை – செங்கல்பட்டு வழித்தடங்களில் புறநகர் ரயில்கள் வழக்கம் போல இயக்கப்பட உள்ளன. பயணிகள் அனைவரும் மாஸ்க், தனிமனித இடைவெளி உள்ளிட்ட கொரோனா வழிகாட்டுதல்களைப் பின்பற்றி பயணம் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளனர். ஞாயிற்றுக்கிழமை குடிமைப் பணி தேர்வுகள் நடைபெறவுள்ள நிலையில், தேர்வு எழுதுபவர்கள் புறநகர் ரயில்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
Source: https://tamil.oneindia.com/news/chennai/tamilnadu-sunday-corona-lockdown-will-chennai-suburban-trains-run-during-lockdown-444679.html