சீரமைக்கப்படும் பாலாற்று பாலம்..! சென்னை வந்தடைய 15 கி.மீ சுற்றிவர வேண்டும்… – தினமலர் – dinamalarnellai.com

சென்னைச் செய்திகள்

1955ஆம் ஆண்டு செங்கல்பட்டை அடுத்து மதுராந்தகம் செல்லும் வழியே பாலாற்றில் மேம்பாலம் கட்டப்பட்டது. பின்னர் 1986ஆம் ஆண்டு பழைய பாலத்தின் அருகிலேயே மற்றொரு புதிய பாலம் கட்டப்பட்டது.

 பழைய பாலத்தின் மீது சென்னை- திருச்சி மார்க்கமாக செல்லும் வாகனங்களும், புதிய பாலத்தில் திருச்சி-சென்னை மார்க்கமாக வரும் வாகனங்களும் வந்து செல்கின்றன. நவம்பரில் பெய்த கனமழை காரணமாக 100 ஆண்டுகளில் இல்லாத வெள்ளப்பெருக்கை பாலாறு சந்தித்தது. இதனால் பழைய பாலத்தில் உள்ள 12 இணைப்புகளும் பழுதடைந்தன, இதனை சரி செய்ய அதிகாரிகள் முடிவு செய்து நேற்று அதற்கான பணிகளை துவங்கினர். இதையடுத்து அவ்வழியே செல்லும் வாகனங்கள் அருகே உள்ள புதிய பாலத்தின் வழியாக திருப்பி விடப்பட்டது. இதனால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு நேற்று மாலை முதல் இன்று அதிகாலை வரை 10 கி.மீ தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நீண்ட நேரமாக காத்திருந்துள்ளது. இதையடுத்து திருச்சி மார்க்கத்தில் இருந்து சென்னை நோக்கி வரும் வாகனங்கள் புக்கத்துரை, சாலவாக்கம் வழியாக காஞ்சிபுரம் நெடுஞ்சாலையில் வந்து திம்மாவரம் பாலம் வழியாக சுமார் 15 கி.மீ. சுற்றி சென்னை நோக்கி திருப்பி விடப்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த வாகன ஓட்டிகள் பாலம் சீரமைப்பு பணி நடைபெறும் இடத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசாரிடம் கடும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். தற்போது சென்னை நோக்கி வரும் வாகனங்கள் 15 கி.மீ. சுற்றியும், சென்னையில் இருந்து திருச்சி நோக்கி செல்லும் வாகனங்கள் புதிய பாலத்தின் வழியாகவும் சென்று வருகின்றன. பழைய பாலத்தில் சீரமைப்பு பணி 20 நாட்கள் நடைபெறும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதன் பின்னர் அருகே உள்ள புதிய பாலத்திலும் சீரமைப்பு பணி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்போது பழைய பாலத்தில் வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படும். இதன் காரணமாக வருகிற 40 நாட்களும் வாகனங்கள் மாற்றுப் பாதையில் செல்லும் என்று தெரிகிறது. இதனால் வரும் நாட்கள் முழுவதும் கடும் போக்குவரத்து நெரிசலும், வாகனங்கள் சுற்றிச்செல்ல வேண்டிய நிலைமையும் ஏற்படும்.

Source: http://www.dinamalarnellai.com/web/news/110236