சென்னை: சென்னை மயிலாப்பூர் ஆடிட்டர் தம்பதி கொலை வழக்கில் புதிய சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. இதை வைத்து கொலைக்கு முக்கிய துப்பு துலங்க போலீஸார் திட்டமிட்டுள்ளார்கள்.
மயிலாப்பூரில் உள்ள பிருந்தாவன் நகரில் வசித்து வந்தவர் ஸ்ரீகாந்த். இவர் ஆடிட்டராக இருந்தார். இவரது மனைவி அனுராதா. இவர்கள் கடந்த ஆண்டு இறுதியில் அமெரிக்காவில் உள்ள தங்கள் மகளின் பிரசவத்திற்காக சென்றிருந்தார்.
அங்கு அந்த பெண்ணுக்கு குழந்தை பிறந்தவுடன் சில நாட்கள் குழந்தையை பார்த்துக் கொண்டிருந்த ஆடிட்டர் தம்பதி கடந்த 7ஆம் தேதி அதிகாலை சென்னை திரும்பியுள்ளனர்.
மயிலாப்பூர் ஆடிட்டர் தம்பதி கொலை.. என்ன நடந்தது? கைதானவர்களை பண்ணை வீட்டுக்கு கூட்டிச்சென்று விசாரணை
மயிலாப்பூர் வீடு
அப்போது மயிலாப்பூர் வீட்டிற்கு இவர்களது கார் டிரைவர் கிருஷ்ணா அழைத்து சென்றார். இந்த நிலையில்தான் தந்தையும் தாயும் வீட்டிற்கு போய் சென்றார்களா என தெரிந்து கொள்ள அவர்களது மகள் அமெரிக்காவில் இருந்து போன் செய்தார். அப்போது அவர்கள் இருவரும் போனை எடுக்காததால் சந்தேகமடைந்த மகள், சென்னையில் உள்ள தனது உறவினருக்கு தகவல் கொடுத்துள்ளார்.
பண்ணை வீட்டில் புதைப்பு
அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் போலீஸார் சம்பவ இடம் விரைந்தனர். அப்போதுதான் தம்பதி கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. மயிலாப்பூர் வீட்டில் கொலை செய்யப்பட்ட தம்பதியை டிரைவர் கிருஷ்ணாவும் அவரது நண்பர் ரவி ராயும் நெமிலிச்சேரியில் உள்ள ஸ்ரீகாந்தின் பண்ணை வீட்டில் புதைத்தனர்.
புதிய சிசிடிவி
இதையடுத்து நேபாளம் தப்பவிருந்த இருவரும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. விமான நிலையத்திலிருந்து மயிலாப்பூர் வீட்டிற்கு தம்பதி காரில் வந்ததற்கான சிசிடிவி காட்சிகள் வெளியாகின. அது போல் தற்போது புதிதாக ஒரு சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. அதில் ஆடிட்டர் தம்பதியை கொன்று அவர்களின் சடலங்களை காரில் போட்டுக் கொண்டு டிரைவரும் அவரது நண்பரும் பண்ணை வீட்டுக்கு செல்லும் காட்சிகள் வெளியாகியுள்ளன.
கொலை
இந்த நேரத்தை கொண்டு கொலை எத்தனை மணிக்கு நடந்திருக்கலாம் என போலீஸார் கண்டுபிடிக்க உதவும். மேலும் பண்ணை வீட்டில் தம்பதியை புதைக்க சரியாக குழித் தோண்டப்பட்டிருந்தது. எனவே கிருஷ்ணாவும் ரவி ராயும் குழியை தோண்டியிருக்க வாய்ப்பில்லை. எனவே வேறு யாரேனும் வெளியாட்கள் இவர்களுக்கு உதவினார்களா என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Source: https://tamil.oneindia.com/news/chennai/police-releases-a-new-cctv-footage-on-chennai-twin-murder-458320.html