இரவு நேரத்தில் வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளையடித்து வந்த சிறுவன் உட்பட நான்கு பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை கண்ணகி நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இரவு நேரங்களில் பூட்டிய வீடுகளை நோட்டமிட்டு தொடர்ந்து கொள்ளை சம்பவங்கள் நடந்து வந்தன. அதன் பேரில் கண்ணகி நகர் போலீசார் தனிப்படை அமைத்து கொள்ளையர்களை தேடிவந்தனர்.
இந்நிலையில், சுனாமி குடியிருப்பு பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தனர். அப்போது கொள்ளையர்களின் முகம் அதில் பதிவாகி இருந்தது. அதை வைத்து எழில் நகரைச் சேர்ந்த விஷால் (எ) சக்திவேல் (18), என்பவரை போலீசார் கைது செய்தனர். அவர் கொடுத்த தகவலின் பேரில் மற்ற நபர்களான அதே பகுதியைச் சேர்ந்த முகமது உசேன் (எ) உசேன் (27), அஜித் (எ) குதிரை அஜித் (19), மற்றும் ஒரு சிறார் ஆகியோரை கைது செய்து விசாரித்தனர்.
விசாரணையில் முக்கிய குற்றவாளியான முகமது உசேன் கண்ணகி நகரில், கஞ்சா அடிக்கும் போது ஏற்பட்ட பழக்கதை பயன்படுத்தி கொள்ளையர்களாக மாறியிருக்கிறார்கள். இந்நிலையில், இவர்கள் 4 வீடுகளின் பூட்டை உடைத்து திருடியிருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து அவர்களிடமிருந்து 10.5 சவரன் தங்க நகை, 250 கிராம் வெள்ளி பொருட்கள், ஒரு டிவி, லேப்டாப் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இதையடுத்து நான்கு பேர் மீதும் வழக்குப்பதிவு செய்த கண்ணகி நகர் போலீசார், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மூவரை சிறையிலும், சிறாரை சீர்திருத்த பள்ளியிலும் அடைத்தனர்.
Source: https://www.puthiyathalaimurai.com/newsview/146235/Chennai–4-arrested-in-theft-case