சென்னை: சென்னையில் இயங்கி வரும் பள்ளி ஒன்றில் மதமாற்றம் நடைபெறுவதாகப் புகார் எழுந்த நிலையில், இது குறித்து தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.
சென்னை ராயப்பேட்டையில் இயங்கி வரும் கிருத்துவ பள்ளியில், பல மாணவ- மாணவிகள் தங்கிப் படித்து வருகின்றனர்.
இந்த பள்ளிக்கு என விடுதியும் செயல்பட்டு வருகிறது. இதனிடையே கடந்த 6ஆம் தேதி இந்த பள்ளியில் குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் உரிமைகள் நல ஆணையம் ஆய்வு நடத்தியது.
ப்பா! யூ டியூபில் மாதம் ரூ.7 லட்சம் வருமானம்! ரூ.45 லட்சத்திற்கு வீடு வாங்கி அசத்திய 15 வயது சிறுமி
ஆய்வு
அப்போது பள்ளியுடன் இணைக்கப்பட்ட மாணவிகள் விடுதி பதிவு செய்யாமல் இருந்தது தெரிய வந்தது. அங்கு மாணவிகள் தங்கும் இடத்தின் சூழல் மோசமாக இருந்ததாகவும் அவர்களைக் கிருத்துவ மதத்தைப் பின்பற்றச் சொல்லி நிர்வாகம் வலியுறுத்துவதாகவும் மாணவிகளில் சிலர் ஆய்வு நடத்த வந்த அதிகாரிகளிடம் புகார் தெரிவித்து உள்ளனர். இதையடுத்து மாணவிகளை மீட்டு, மாற்று இடத்தில் தங்க வைக்க மாவட்ட குழந்தைகள் நல ஆணையத்திற்கு அறிவுறுத்தினர்.
கடிதம்
இருப்பினும், இதில் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இது தொடர்பாகக் கடந்த சனிக்கிழமை தமிழக தலைமைச் செயலாளர் மற்றும் காவல் துறை இயக்குநருக்குத் தேசிய குழந்தைகள் உரிமை ஆணைய தலைவர் கடிதம் எழுதி இருந்தார். அதில் ஆய்வுக்குப் பின்னர் ஹாஸ்டல் வார்டன் மாணவிகளை மிரட்டுவதாகவும் மாணவிகளின் பெற்றோரைத் தொடர்பு கொள்ளும் பள்ளி நிர்வாகம் மாணவிகள் அங்கேயே தங்க ஒப்புதல் தருமாறு பெற்றோரை வலியுறுத்துவதாகவும் புகார்கள் வந்துள்ளதாகக் கூறப்பட்டு இருந்தது.
மூன்று நாட்களில்
மேலும், அடுத்த 24 மணி நேரத்தில் மீட்கப்படப்பட்டு தேசிய குழந்தைகள் உரிமை ஆணையத்தில் முன்னிறுத்தப்பட வேண்டும் என்றும் இதில் தொடர்புடைய நபர்கள் மீது முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யப்பட வேண்டும் என்றும் கூறப்பட்டு உள்ளது. இந்த விவகாரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து மூன்று நாட்களில் அறிக்கை சமர்ப்பிக்கவும் அந்த கடிதத்தில் கூறப்பட்டு இருந்தது.
விசாரணை
இந்நிலையில், தமிழ்நாடு அரசு சார்பில் அதிகாரிகள் இன்று அந்த விடுதியை ஆய்வு செய்தனர். மேலும், மாணவ -மாணவிகள் மற்றும் பெற்றோர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. இதில் மதமாற்றம் செய்ய அழுத்தம் எதாவது தரப்பட்டதா என்பது குறித்து அரசு அதிகாரிகள் விசாரணை செய்ததாகத் தெரிகிறது.
விளக்கம்
அந்த விசாரணையில் பள்ளியில் மதமாற்றம் செய்யும்படி யாரையும் பள்ளி நிர்வாகம் வலியுறுத்தவில்லை என்பது தெரிய வந்தது. மாணவிகள் விடுதியில் மட்டும் சில குறைபாடுகள் மட்டுமே உள்ளதாகவும் அதைச் சரி செய்ய நடவடிக்கை எடுக்கும்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளதாகக் கூறப்பட்டு உள்ளது. மேலும், பள்ளியில் கட்டாய மதமாற்றம் எதுவும் நடைபெறவில்லை என்றும் தமிழ்நாடு அரசு மறுப்பு தெரிவித்துள்ளது.
மதமாற்றம் நடக்கவில்லை
இதனிடையே குறித்து அந்த பள்ளியின் விடுதிகளின் வாரிய இயக்குநர் சாமுவேல் கூறுகையில், “அந்த விடுதி சுமார் 100 ஆண்டுகளுக்கு மேல் இயங்கி வருகிறது. எனவே, இது குழந்தைகள் அமைப்பு கூறிய எந்த புகாருக்குக் கீழும் வராது. அவர்கள் எங்களிடம் எதையும் கூறாமல் நேரடியாக அரசுக்கு அறிக்கை கொடுத்துள்ளனர். இதனால் என்ன பிரச்சினை என்றே எங்களுக்குத் தெரியவில்லை. மேலும் விடுதியில் எந்த மாணவிகளும் மதமாற்றத்திற்குக் கட்டாயப்படுத்தவில்லை” என்றார்.
Source: https://tamil.oneindia.com/news/chennai/tamilandu-govt-explains-about-forced-conversion-in-chennai-christian-school-475379.html