சென்னை, தியாகராயநகர் சாரதாம்பாள் தெருவைக் சேர்ந்தவர் நூருல் யாக்கூப் (71). இவர், துபாயில் தனியார் கட்டுமான நிறுவனத்தில் நிர்வாக இயக்குநராகப் பணியாற்றி ஓய்வுபெற்றவர். இவரும், இவரின் மனைவியும் தனியாக சென்னையில் வசித்துவந்தனர். நூருல் யாக்கூப் மனைவியின் உறவினரான முஸ்தபா என்பவர் மூலம் மொய்தீன் (28) என்பவர் கடந்த ஒன்பது நாள்களுக்கு முன்னர் இவர்களிடம் வேலையில் சேர்ந்திருக்கிறார். இந்தநிலையில், நேற்று இரவு வீட்டுக்குள் வீச்சரிவாளுடன் ஒரு மர்மக் கும்பல் நுழைந்தது.
வீட்டிலிருந்த நூருல் யாக்கூப், அவரின் மனைவி, மொய்தீன், முஸ்தபா ஆகியோரைக் கத்திமுனையில் மிரட்டிய அந்தக் கும்பல், பின்னர் அவர்களைக் கயிறால் கட்டியது. இதையடுத்து அந்தக் கும்பல், வீட்டிலிருந்த 250 சவரன் தங்க நகைகள், 95 லட்சம் ரூபாய், சொகுசு கார், 60,000 ரூபாய் மதிப்பிலான வாட்ச் ஆகியவற்றைக் கொள்ளையடித்துவிட்டு முஸ்தபாவையும் கடத்திச் சென்றனர். கொள்ளையர்கள் வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த சொகுசு கார், ஆட்டோவையும் எடுத்துச் சென்றனர்.
Source: https://www.vikatan.com/news/crime/250-sovereign-jewels-95-lakh-rupees-and-car-theft-in-chennai