சென்னை: இரவு முழுக்க பெய்த கனமழை காரணமாக சென்னையில் பல்வேறு சாலைகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. நெட்டிசன்கள் பலர் தங்கள் பகுதிகளில் ஏற்பட்டுள்ள வெள்ள வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்கள்.
சென்னையில் அதிகாலை 3 மணி வரை 189 மிமீ மழை பெய்து உள்ளது. இரவு முழுக்க கனமழை பெய்தது. இன்னும் பல இடங்களில் விடாமல் மழை பெய்து வருகிறது. தென்மேற்கு வங்க கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக இந்த மழை பெய்து வருகிறது.
ரொம்ப முக்கியம்.. தமிழ்நாட்டில் 3 மணி நேரத்திற்கு மழை பிச்சு எடுக்க போகிறது- வானிலை மையம் எச்சரிக்கை
நேற்று காலை 8 மணி முதல் இன்று காலை 5 மணி வரை சென்னை மீனம்பாக்கத்தில் 4.8 செ.மீ மழை பதிவாகி உள்ளது. தரமணியில் 5.4 செ.மீ, வில்லிவாக்கத்தில் 16.15 செ.மீ, புழலில் 11.10 செ.மீ, திருச்சி துவாக்குடியில் 2.90 செ.மீ மழைப்பதிவாகி உள்ளது.
சென்னை மழை
சென்னையில் இரவு முழுக்க பெய்த மழை, 2015ல் வெள்ளம் ஏற்பட்ட போது பெய்த மழையை நினைவு படுத்துவதாக பலர் தெரிவித்துள்ளனர். 2015ன் இந்த மழை கண் முன் நிறுத்திவிட்டது.. இரவு முழுக்க பெய்த மழை மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியதாக நெட்டிசன்கள் பலர் குறிப்பிட்டுள்ளனர்.
இரவு முழுக்க
சென்னையில் இரவு முழுக்க விடிய விடிய மழை பெய்துள்ளது. இதனால் இரவு நேரத்தில் சில இடங்களில் மின் தடையும் ஏற்பட்டது. நெட்டிசன்கள் பலர் இரவில் பெய்த கொடும் மழையை வீடியோ எடுத்து ட்வீட்டரில் பகிர்ந்து உள்ளனர்.
சாலைகள்
சென்னையில் பெய்த மழை காரணமாக சாலைகளில் பல இடங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. வடபழனி, கிண்டி, தி நகர், அண்ணாசாலை, நுங்கம்பாக்கம், போரூர், வளசரவாக்கம், குரோம்பேட்டை, நங்கநல்லூர் என்று பல இடங்களில் சாலைகளில் தண்ணீர் தேங்கி உள்ளது. பல இடங்களில் முட்டிக்கு மேல் தண்ணீர் தேங்கி ஓடிக்கொண்டு இருக்கிறது.
வாகனங்கள்
சென்னை மழை காரணமாக சாலைகளில் பல இடங்களில் வாகனங்கள் நீரில் மூழ்கி உள்ளன. பொதுவாக 2-3 மணி நேர மழைக்கே சென்னையில் தண்ணீர் தேங்கிவிடும். இந்த நிலையில் இரவு முழுக்க பெய்த மழை காரணமாக இப்போது பல இடங்களில் வீடுகளுக்குள்ளும் தண்ணீர் புகுந்துள்ளது. இந்த வீடியோக்களை நெட்டிசன்கள் பலர் இணையத்தில் பகிர்ந்து வருகிறார்கள்.
போக்குவரத்து
தொடர் மழை காரணமாக சென்னையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு உள்ளது. சென்னையில் கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், சோழவரம், தாம்பரம், குரோம்பேட்டை, வேளச்சேரி, எழும்பூர், அண்ணா சாலை, வடபழனி, சைதாப்பேட்டை, தி நகர், கோயம்பேடு, அடையாறு, அண்ணா நகர் ஆகிய இடங்களில் மழை பெய்து வெள்ளம் ஏற்பட்டுள்ளதால் வாகனங்கள் செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
Source: https://tamil.oneindia.com/news/chennai/heavy-rain-in-chennai-netizens-share-videos-of-the-flood-in-the-roads-438144.html