Coronavirus Cases in Tamil Nadu: சென்னை, மதுரை, ஈரோடு: கொரோனா பாதிப்பு மேலும் அதிகரிப்பு! – Samayam Tamil

சென்னைச் செய்திகள்

கொரோனாவின் தாக்கம் உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கில் மக்கள் உயிரிழந்து வருகின்றனர்.

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 700ஐ கடந்துள்ளது. 17 பேர் உயிரிழந்துள்ளனர்.

தமிழ்நாட்டில் நேற்று இரவு நிலவரப்படி 29 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். ஒருவர் உயிரிழந்துள்ளார். தமிழ்நாடு முழுக்க 24 ஆயிரத்துக்கும் அதிகமானோர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். பலர் கொரோனா அறிகுறிகளுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொரோனா: தமிழ்நாட்டின் தற்போதைய நிலவரம் என்ன?

இந்நிலையில் தமிழகத்தில் மேலும் 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தேசிய சுகாதாரத் துறை அமைச்சகம் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளது. இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தமிழ்நாட்டில் 35ஆக உயர்ந்துள்ளது.

மதுரையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இறந்து போனவரது குடும்பத்தினர் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதேபோல் ஈரோட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவருடன் தொடர்பில் இருந்த இருவருக்கும், சென்னையில் பாதிக்கப்பட்டவருடன் தொடர்பில் இருந்த ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. மேலும் சென்னையைச் சேர்ந்த 25 வயது பெண் அரியலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

Source: https://tamil.samayam.com/latest-news/state-news/coronavirus-cases-increased-in-chennai-madurai-erode/articleshow/74842983.cms